மொடர்னா நிறுவனம், தன் புதுப்பிக்கப்பட்டுள்ள கொவிட்-19 கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி, பிஏ.4, பிஏ.5 புதிய ஓமிக்ரான் துணைத் திரிபுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குவதாக தெரிவித்து உள்ளது.
முன்னோட்டச் சோதனையில் 800 பேரிடம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கிருமியை நடுநிலையாக்கும் 'ஆண்டிபாடி'கள் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உருவானதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
"இந்தத் தரவை ஒழுங்குமுறை அமைப்புகளிடம் நாங்கள் உடனடியாக சமர்ப்பிப்போம். ஆகஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த தலைமுறை பூஸ்டர் தடுப்பூசியை விநியோகிக்க நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று மொடர்னா தலைமை நிர்வாகி ஸ்டெஃபன் பென்சல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைவிட, ஓமிக்ரானுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி வலுவான நோயெதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தியதை ஜூன் 8ஆம் தேதி மொடர்னா நிறுவனம் வெளியிட்ட முன்னோட்டப் பரிசோதனை முடிவுகள் காட்டின.
அண்மைக்காலமாக சிங்கப்பூரில் கூடுதலானோரிடம் பிஏ.4, பிஏ.5 ஓமிக்ரான் துணைத் திரிபுகள் கண்டறியப்பட்டு வருகிறது. இவற்றின் பரவல் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கூறியிருந்தது. பிஏ.2 துணைத் திரிபைவிட இத்தகைய துணைத் திரிபுகள் பரவலாகப் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 7,109 பேரிடம் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. திங்கட்கிழமை பதிவாகி இருந்த 3,220 தொற்று பாதிப்புளைவிட இது இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். கடந்த வாரம் சமூக அளவில் பதிவான கொவிட்-19 பாதிப்புகளில், பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகள் ஏறக்குறைய 30 விழுக்காடு அளவு பங்கு வகித்தன. ஒப்புநோக்க, அதற்கு முந்தைய வாரத்தில் இந்த விகிதம் 17 விழுக்காடாக இருந்தது. புதுவகை துணைத் திரிபுகள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன என்பதை இது காட்டுகிறது. சிங்கப்பூரில் இந்தத் துணைத் திரிபுகள் கடந்த மாதம் நடுப்பகுதியில்தான் முதன்முறையாக கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ஏற்படக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் முன்னதாகக் கூறியிருந்தார். என்றாலும், மக்கள்தொகையில் பெரும்பாலானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இம்முறை கவலை குறைவாக உள்ளது.