சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவை ஜூலை 7லிருந்து தொடங்க உள்ளது. இந்தப் படகுச் சேவை தானா மேரா படகு முனையத்தையும் ஜோகூரிலுள்ள டெசாரு படகு முனையத்தையும் இணைக்கும்.
இதற்கான கட்டணச் சீட்டுகள் மற்றும் சேவை நேரங்களைப் பற்றிய விவரங்களை டெசாரு கோஸ்ட் இணையப்பக்கம், பாத்தாம் ஈஸ்ட் இணையப்பக்கம் ஆகி யவற்றில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு இணையப்பக்கங்கள் மூலம் இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து கட்டண அட்டைகளை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் ஒரு படகுச் சேவை டெசாரு சென்று அங்கிருந்து மீண்டும் சிங்கப்பூர் திரும்பும்,
இதை நேற்று 'டெசாரு கோஸ்ட் டெஸ்டினேஷன் ரிசோர்ட்' என்ற நிறுவனமும் 'டெசாரு லிங்க் ஃபெரி சர்விசஸ்' என்ற நிறுவனமும் தங்களது அறிக்கை மூலம் தெரிவித்தன.
சிங்கப்பூரிலிருந்து டெசாரு செல்ல 90 நிமிடங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், தொடக்கமாக படகில் 330 பேர் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்
படுகிறது.
மேலும், டெசாரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், கூடுதல் படகுச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிக்கை விளக்கியது.
"இந்தப் புதிய படகுச் சேவை டெசாரு கடற்கரைக்கு மேலும் பல அனைத்துலக பயணிகள் வந்து போக வழி ஏற்படுத்தும்.
"இந்த அனைத்துலக தொடர்புச் சேவையை ஏற்படுத்தித் தந்து, இதற்காக அணுக்கமாக பணியாற்றிய அனைத்து அரசு அமைப்புகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்," என்று டெசாரு டிவெலப்மண்ட் ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான திருவாட்டி ரோஸ்லினா அர்பாக் கூறினார்.
இதுபற்றிக் கூறிய டெசாரு ஈஸ்ட்ஃபரிஸ் செர்விசஸ் சேவையை இயக்கும் பாத்தாம் ஈஸ்ட் நிறு
வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கானாவே, "இன்னும் இரு வாரங்களில் டெசாருவுக்கான படகுச் சேவையை தொடங்க முடிவதை எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. டெசாரு கடற்கரை, ஜோகூரின் தென்கிழக்குப் பகுதி ஆகியவை பிரசித்தி பெற்றவை.
"இந்நிலையில், விடுமுறையைக் கழிக்க எண்ணுவோருக்கு இந்த அனைத்துலகப் பயணச் சேவை பெரும் பயன்தரும் அனுபவமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

