நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்த உதவும் புதிய கூட்டு முயற்சி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
'லுதெரன் கம்யூனிட்டி கேர் சர்விசஸ்' (எல்சிசிஎஸ்) அமைப்பும் உள்ளூர் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான 'ஐசிஎம் ஃபார்மா'வும் இணைந்து வேலையிடங்களில் கலந்துரையாடல்கள், குறைந்த விலையில் சுகாதாரப் பராமரிப்புப் பொருள்களின் விற்பனை ஆகிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றன.
ஊழியர்களிடையே பிரச்சினைகளைக் கையாளுதல், உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். 'ஐசிஎம் ஃபார்மா' நிறுவனம், கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினித் திரவத்தையும் வாய் கொப்பளிக்கும் திரவத்தையும் குறைந்த விலையில் வழங்க முன்வந்துள்ளது.
புதிய திட்டம் குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று அறிவித்தார். 'எல்சிசிஎஸ்' அமைப்பின் ஐந்தாவது மறுசீரமைப்புக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் உச்சத்தில் இருந்தபோது குடும்ப வன்முறை, மனநலம் போன்ற விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றதாகத் திரு மசகோஸ் கூறினார்.
இவற்றுக்குத் தனியொரு நிறுவனமோ ஒரு துறை மட்டுமோ தீர்வுகாண இயலாது. மக்கள், தனியார்துறை, அரசாங்கப் பிரிவுகள் என அனைவரும் இவற்றுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இணையத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் முதல் நாளில் 150க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

