சிங்கப்பூரில் இலக்கிய, சமூக நிகழ்வுகளில் பங்களித்துவந்த பங்ளாதேஷ் ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாதது குறித்து மனிதவள அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
கட்டுமானத் துறை ஊழியரான ஸாகிர் ஹுசைன் கோகன், தான் 19 ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலைசெய்ததாகக் கூறியதை அமைச்சு சுட்டியது. அவர் பலமுறை இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து எழுதியதாகவும் இருந்தபோதும் அவரது வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
ஆனால் ஒருவர் வெளியிடும் பதிவுகள் தவறான புரிதலை ஏற்படுத்தும்போதோ சினத்தைத் தூண்டுவதாகவோ தவறானதாகவோ இருக்கும்பட்சத்தில் அதற்கு முற்றுப்புள்ளி இட நேரிடும் என்று அமைச்சு கூறியது.
சென்ற ஆண்டு அக்டோபரில் ஸாகிர் 'வெஸ்ட்லைட் ஜாலன் துகாங்' தங்கும் விடுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்துப் பதிவிட்டிருந்தார்.
உணவுத்தரம், கொவிட்-19 நோயாளிகளை பராமரிப்பு நிலையங்களுக்குக் கொண்டுசெல்வதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை தொடர்பில் ஊழியர்களுக்கும் விடுதி நிர்வாகத்திற்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது.
அதன் தொடர்பில் உதவி கேட்டு அழைப்பு வந்ததால் காவல்துறை அங்கு செல்ல நேரிட்டது.
சம்பவத்தில் கூடுதல் காவல்படைப் பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அப்போது உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
ஆனால் ஸாகிர் சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்படுவதாகவும் ராணுவத்தினரும் ஆயுதப்படை வாகனங்களும் 'வெஸ்ட்லைட்' தங்கும்விடுதியைச் சுற்றி வளைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்.
அது தவறான சித்திரிப்பு என்று கூறிய மனிதவள அமைச்சு, ஸாகிரின் தவறான பதிவால் அந்தத் தங்கு விடுதியிலோ வேறு விடுதிகளிலோ இருந்த ஊழியர்கள் தவறாகத் தூண்டப்பட்டிருக்கக்கூடும் என்பதையும் அவர்களின் உணர்வுக் கொந்தளிப்பால் பொது ஒழுங்கு சீர்குலைந்திருக்கக்கூடும் என்பதையும் அது சுட்டியது.
"ஸாகிர் வெகுகாலமாக சமூக ஆர்வலராகச் செயல்பட்டபோதும் அவரது வேலை அனுமதிச் சீட்டு முன்னர் புதுப்பிக்கப்பட்டு வந்தது.
"தற்போது அவரது அனுமதி காலாவதியாகிவிட்ட நிலையில் வேலை ஏதுமின்றி அவரால் சிங்கப்பூரில் தங்கியிருக்க இயலாது," என்று அமைச்சு தெரிவித்தது.
புதுப்பிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து ஸாகிர் மேல்முறையீடு செய்திருந்தார்; ஆனால் அவரது நிறுவனம் மேல்முறையீடு செய்யவில்லை.
இம்மாதம் 15ஆம் தேதி அவர் தாயகம் திரும்பினார். இங்கிருந்த காலகட்டத்தில் பங்ளாதேஷ் சமூகத்தினருக்கான கவிதைப் போட்டிகளில் பரிசுபெற்றதுடன் இலக்கியக் குழு ஒன்றையும் தொடங்கி நடத்திவந்தார்.

