ஓங் லாம் வா எனும் 54 வயது ஆடவர் தனது பொறுப்பற்ற செயலால் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
செங்காங் வட்டாரக் குடியிருப்பின் 16ஆவது மாடி வீட்டில் வசிக்கும் ஓங், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி, தீக்குச்சிகளைக் கொண்டு தானே தயாரித்த வெடிபொருளை சன்னல் வழியே கீழே வீசினார். அதே குடியிருப்பின் 6ஆவது மாடி வீட்டில் அது வெடித்தது. இதனால் திடுக்குற்ற முகமது யாசின் ஹாடி அப்போது வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
காவல்துறையிடம் அவர் புகார் அளித்ததையடுத்து அதிகாரிகள் ஓங்கை அடையாளம் கண்டனர்.
விசாரணையில் இதற்கு முன்னரும் இரண்டு முறை வெடிபொருளை வெடிக்கச் செய்ய முயன்றதாக அவர் தெரிவித்தார்.
ஓங்கிற்கு, மறுவாழ்வுப் பயிற்சி, வழக்கமான இடைவெளியில் காவல்துறை அதிகாரியை நேரில் சென்று காணுதல், கட்டாய சமூக சேவை ஆகியவற்றுக்கு நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
செங்காங் மருத்துவமனையை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டையும் ஓங் எதிர்நோக்குகிறார்.
இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, அடுத்த மாதம் 21ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

