மார்சிலிங்கில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் நேற்று இரவு தீ மூண்டது. தீ மூண்டபோது வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மார்சிலிங் கிரசண்ட் புளோக் 218ல் உள்ள இரண்டாவது மாடி வீட்டில் இரவு 10.40 மணியளவில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
தீயணைப்பாளர்கள் சம்பவயிடத்தை அடைந்தபோது, வீட்டிலிருந்து தீ கொளுந்துவிட்டு எரிந்ததாகவும், கரும் புகை சூழ்ந்திருந்ததாகவும் கூறப்பட்டது. படுக்கையறையில் மூண்ட தீ வீடு முழுவதும் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த இரண்டு சிறுவர்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டனர். குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவயிடத்தை அடையும் முன்னரே, பொதுமக்களில் ஒருவர் சிறுவர்களைக் காப்பாற்ற வீட்டுக் கதவை உடைக்க முற்பட்டதாகக் கூறப்பட்டது. சிறுவர்கள் புகையை சுவாசித்ததாகவும் ஆனால் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்கத்தில் வசிக்கும் 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து குடிமைத் தற்காப்புப் படை விசாரித்துவருகிறது.