மார்சிலிங் வட்டாரத்தில் உள்ள ஒரு வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வீட்டில் இரு சிறுவர்கள் தனியாக இருந்தனர்.
இரவு 10.40 மணி அளவில் புளோக் 218 மார்சிலிங் கிரசெண்ட்டில் தீ மூண்டது குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
சம்பவ இடத்தைத் தீயணைப்புப் படையினர் சென்றடைவதற்குள் வீட்டிற்குள் புகுந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவர்
களைக் காப்பாற்றினர்.
அந்த இரண்டாவது மாடி வீட்டின் வரவேற்பு அறையில் அச்
சிறுவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு முன்பு சிறுவர்களைக் காப்பாற்ற பொதுமக்களில் ஒருவர் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே விரைய முயன்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சிறுவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அந்த ஆடவருடன் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று அது தெரிவித்தது.
தீயணைப்புப் படை சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது அவ்வீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் அதிலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் சுவாசக் கருவிகளை அணிந்துகொண்டு போராடி தீயை அணைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காப்பாற்றப்பட்ட இரு சிறுவர்களும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அவசர மருத்துவ வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட கட்டடத்தில் வசிக்கும் ஏறத்தாழ 60 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
தீயினால் ஏற்பட்ட புகையை அந்த இரண்டு சிறுவர்களும் சுவாசித்ததால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தற்போது இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டது ஒரு வாடகை வீடு என்றும் அவர் கூறினார்.
சிறுவர்களின் குடும்பத்தினருக்கு அதே வட்டாரத்தில் தற்காலிக வசிப்பிடத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வழங்கும் என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை விரிவுபடுத்த மார்சிலிங் கிரசெண்ட, மார்சிலிங் லேன் ஆகிய வட்டாரங்களில் உள்ள எட்டு குடியிருப்புக் கட்டடங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திரும்பப்
பெற்றுக்கொள்ளப் போவதாக அண்மையில் செய்தி வெளியானது.
அவற்றில் இந்த புளோக் 218 கட்டடமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.