இன்ஸ்டகிராம் தளத்தில் இஸ்லாத் துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்ட இளையர் ஒருவருக்கு 18 மாதம் நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீன நாட்டைச் சேர்ந்த சன் சிகோங், 21, ஒவ்வொரு நாளும் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வெளியே செல்லக் கூடாது. அது மட்டுமல்லாமல் அறுபது மணி நேரம் இவர் சமூகப் பணியாற்ற வேண்டும்.
இவரது நன்னடத்தையை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோர் 5,000 வெள்ளி பிணைப் பத்திரம் அளித்துள்ளனர்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான இவர் மே மாதம் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டார். மற்றவர் களின் சமய உணர்வுகளைப் புண் படுத்தும் நோக்கத்தில் இவரது பதிவு இருந்தது.
இவருக்குத் தண்டனை விதிக்கும்போது தொந்தரவு விளைவித்தது உள்ளிட்ட இதர இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் செந்தில்குமரன் சபாபதி, "பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலக்கதையை ஆபாசக் கருத்துகளுடன் அவர் வெளியிட்டதாகவும் அதன் பிறகு அவர் முன்பு பதிவிட்ட இஸ்லாத்துக்கு எதிரான பதிவு ஜூன் 7, 2020ல் மீண்டும் பரவியதாகவும் தெரிவித்தார்.
திரு சன்னின் பாலியல் வன்முறை தொடர்பான பதிவுகளைக் கண்டதும் ஆவேசமடைந்த சிலர் அதற்கு பதில் அளித்திருந்தனர். அப்போது திரு சன் முன்பு பதிவிட்ட இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனால் இஸ்லாத்துக்கு எதிரான அவரது பதிவு மீண்டும் இணையத்தில் பரவியது என்று வழக்கறிஞர் செந்தில் குமரன் சபாபதி விளக்கினார்.
இதன் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு 62 புகார்கள் வந்ததாகவும் அவர் சொன்னார்.
முன்னதாக காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இன்ஸ்டகிராம் பதிவாளர் ஒருவர் வெளியிட்ட மற்றவர்களைப் புண்படுத்தக்கூடிய பதிவால் இஸ்லாத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடும் என்று பல புகார்கள் வந்ததாக குறிப்பிட்டிருந்தனர். வெறுப்பூட்டும் அந்தப் பதிவு சமய உணர்வுகளை புண் படுத்தக்கூடிய பதிவு என்றும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
அதே அறிக்கையில் சிங்கப் பூரில் சமய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கை களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்.