மார்பகத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்குப் புற்று அணுக்கள் பரவிவிட்ட நிலையில் இருப்போர், புற்றுநோயைக் கட்டுப்படுத்த இருவகை மருந்துகளைச் சேர்த்து உட்கொள்வது உதவலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த ஆய்வாளர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய்க் கழகம், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கப்பூர் புற்றுநோய் அறிவியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.
'லெட்ரோஸோல்' என்பது சுரப்புநீர் எதிர்ப்பு மருந்து. தைராய்ட், கல்லீரல் புற்றுநோய்களைக் குணப்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பிடம் இருந்து 'லென்வடினிப்' எனும் மருந்து ஏற்கெனவே ஒப்புதல் பெற்றுள்ளது.
நான்காம் கட்ட மார்பகப் புற்றுநோய் உடைய 43 பேரிடம் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர். ஆய்வில் பங்கெடுத்த அந்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட முந்தைய சிகிச்சை முறை பலன் தரவில்லை.
மேற்கூறப்பட்ட இருவகை மருந்துகள் இணைக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டபோது, ஆய்வில் பங்கேற்ற பாதிப் பேரிடம் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கின அல்லது ஆறு மாதங்களுக்கு மேலாக புற்றுநோய் கட்டுக்குள் வந்தது. அவர்களில் பலர் தங்கள் வழக்கமான அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 2,000க்கும் அதிகமான மாதர்கள் மார்பகப் புற்றுநோயால் அவதியுறுகின்றனர்.
ஆண்டுதோறும் 400க்கும் மேற்பட்டோர் இந்நோயால் இறப்பதாக சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.