பாதுகாப்புப் பணியாளர்களின் நலம்பேணும் புதிய குழு ஒன்று இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படவிருக்கிறது.
'நைட் ஃபிரேங்க் சிங்கப்பூர்' நிறுவனமும் சிங்கப்பூர் பாதுகாப்புப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நேற்று இதனை அறிவித்தன.
புதிய குழு பாதுகாப்புப் பணியாளர்களுக்கு கற்றல், மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதுடன் மனநல ஆலோசனை, சமூக ஆதரவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்.
ஊழியர்களை அதிகம் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் நோக்கில் தானியக்க வேலை நடைமுறைகள் குறித்தும் இந்தக் குழு ஆய்வுசெய்யும்.
புதிய குழுவில் பாதுகாப்பு அமைப்புகள், சிங்கப்பூர் பாதுகாப்புப் பணியாளர்கள் சங்கம், சொத்து மேலாண்மை முகவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருப்பர் என்று கூறப்பட்டது.
குழுவின் இலக்குகள் நிறைவேறப் பங்களிக்கும்படி பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தொழிற்சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
முன்னதாக 'நைட் ஃபிரேங்க் சிங்கப்பூர்' நிறுவனம் அதன் இரண்டு ஏலக்குத்தகைகளில் புதிதாக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான வயது வரம்பு குறித்துக் குறிப்பிட்டிருந்தது.
இது தகுதி அடிப்படையிலான ஆள்சேர்ப்பு நடைமுறைக்கு எதிரானது என்றும் இதனால் ஊழியர்கள் நியாயமற்ற முறையில் பணியில் இருந்து நீக்கப்படும் சாத்தியம் இருப்பதையும் சிங்கப்பூர் பாதுகாப்புப் பணியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.
அதன் பிறகு மன்னிப்புக் கோரிய 'நைட் ஃபிரேங்க் சிங்கப்பூர்' நிறுவனம் ஏலக்குத்தகை தொடர்பான ஆவணங்களைத் திருத்தி மீண்டும் வெளியிட்டது.
நிறுவனம் ஆள்சேர்க்கையில் நியாமான நடைமுறைகளைப் பின்பற்றுவதைச் சங்கம் உறுதிசெய்ததாகக் கூறப்பட்டது.
அதிகரிக்கும் செலவுகள், ஊழியர் எண்ணிக்கை குறைவு ஆகிய பிரச்சினைகள் குறித்து இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
துறைசார்ந்த தரப்புகளின் ஒத்துழைப்பு, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், ஆழமான புரிதல் ஆகியவற்றின் மூலமே இவற்றுக்குத் தீர்வுகாண முடியும் என்று நேற்றைய கூட்டறிக்கை குறிப்பிட்டது.

