இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் பொருள், சேவை வரியை ஏய்த்ததுடன் பொய்யான ஆவணங்களையும் சமர்ப்பித்த சரக்கு நிர்வாக நிறுவனத்தின் இயக்குநருக்கு கிட்டத்தட்ட 4.42 மில்லியன் வெள்ளி அபராதமும் எட்டு மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 44 வயது ஹோ ஷியன் டியன் ஏறத்தாழ ஒன்றேகால் மில்லியன் வெள்ளி பொருள், சேவை வரியைச் செலுத்தாமல் ஏய்த்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று தெரிவித்தது.
2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இவ்வாறு ஏமாற்றியதாகவும் இறக்குமதியான பொருள்களின் மதிப்பு குறித்துத் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது. 632 இறக்குமதிகள் தொடர்பில் இவ்வாறு தவறான தகவல்களை அவர் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹோ தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும் முன்னர் இத்தகைய மேலும் ஆறு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
2019ஆம் ஆண்டில், இறக்குமதி நிறுவனம் நடத்தும் ஹோவின் வாடிக்கையாளர் ஒருவரிடம் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் சோதனை நடத்தியது.
சோதனையின்போது இறக்குமதியான சரக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி தொடர்பில் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத்துறை கூறியது.
வாடிக்கையாளர் செலுத்திய பொருள், சேவை வரித் தொகையைப் பெற்றுக்கொண்ட ஹோ அதனைத் திருத்தி தவறான தொகையை ஆணையத்திடம் செலுத்தினார். வாடிக்கையாளருக்கு இந்த விவரம் தெரியாமலும் பார்த்துக்கொண்டார்.
சுங்கத்துறைக்கு அவர் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.