'டிபிஎஸ்' வங்கி மோசடியில் 60க்கும் மேலானோர் 60,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழக்கக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேர்மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் 16 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டோரில் ஐவர் 1,500 வெள்ளி பணத்துக்கு ஈடாக அறிமுகமற்றோரிடம் தங்களது 'சிங்பாஸ்' கணக்கு விவரங்களைத் தந்ததாகக் கூறப்பட்டது. மோசடிக்காரர்கள் அந்த விவரங்களைப் பயன்படுத்தி புதிதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதுடன் 'டிபிஎஸ்' வங்கி மோசடி மூலம் ஈட்டிய பணத்தை நல்ல பணமாக மாற்ற அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டது.
மோசடிக்காரர்கள் 'டிபிஎஸ்' வங்கியில் இருந்து அனுப்புவதுபோலக் குறுஞ்செய்திகளை அனுப்புவர். வங்கிக் கணக்கில் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சந்தேகத்துக்குரிய இத்தகைய நடவடிக்கைகளால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் அந்தக் குறுஞ்செய்தி சொல்லும்.
இணைக்கப்பட்டிருக்கும் இணைய முகவரி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுவர். அதன்படி செய்தபோது பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் இருந்த தொகையை ஏமாற்றுக்காரர்கள் தங்கள் கணக்குக்கு மாற்றிகொள்வர்.
'சிங்பாஸ்' விவரங்களைத் தந்த ஐவரில் சிலருக்கு பேசியபடி 1,500 வெள்ளி தொகை தரப்படவில்லை என்று காவல்துறை கூறியது.
'சிங்பாஸ்' கணக்கு, வங்கிக் கணக்கு, கைத்தொலைபேசித் தொடர்பு ஆகியவை தொடர்பான விவரங்களை எளிதில் பணம் சம்பாதிக்க உதவுவதாகக் கூறுவோரிடம் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகையோர் குற்றச்செயல்களில் தொடர்புடையதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள நேரிடும்.
'யூஓபி' வங்கியில் தனது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கிய 16 வயது இளம்பெண் அதனை மோசடிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததாகக் கூறப்பட்டது.
தவறான நடவடிக்கைகளுக்கு 'சிங்பாஸ்' விவரங்களைப் பகிர்ந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டால் 10,000 வெள்ளி வரையிலான அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
தனது பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.