சிங்கப்பூரில் பல மோசடி சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் மேற்பட்டவர்களை காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட $6 மில்லியனை இழந்ததாகக் கூறப்பட்டது.
இரண்டு வார சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர். 15 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்ட 220 ஆடவர்களும், 107 பெண்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தெரிவித்தது.
ஏமாற்று, பணமோசடி, உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்கு இவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வங்கி தொடர்பான மோசடி, இணையம் வழி காதல் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, முதலீடு மோசடி, மின்வர்த்தக மோசடி, கடன் மோசடி, சீன நாட்டு அதிகாரிகள் போன்று நடித்து மோசடி செய்தது போன்ற வெவ்வேறு மோசடிகளை இவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை கேட்டுகொண்டது.
மோசடி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை உறுதியளித்தது.