போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்புச் சங்கம் (சானா) மிக முக்கிய பங்காற்றி இருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று தெரிவித்தார்.
அந்தத் தொண்டூழிய அமைப்பின் 50வது ஆண்டுவிழா நேற்று போன விஸ்தாவில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஒன்-நார்த் வளாகத்தில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக அதிபர் உரையாற்றினார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் சானா 1972ல் தோற்றுவிக்கப்பட்டதையும் சிங்கப்பூர் போதைப்பொருளை ஒழிப்பதில் வெற்றிகரமான நாடாக இருந்து வந்துள்ளது என்பதையும் அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இதில் சானா அமைப்பு மிக முக்கியமான பங்காற்றி வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
போதைப் புழங்கிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் அவர்கள் வெற்றிகரமான முறையில் மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைய உதவுவதிலும் போதைப் புழங்கிகளின் குடும்பத்தாருக்கு ஆதரவு தருவதிலும் சானா ஆற்றியுள்ள தொண்டை அதிபர் அங்கீகரித்துப் பாராட்டினார்.
கஞ்சா போன்றவற்றை சட்ட பூர்வமாக்க அதிக நாடுகள் இப்போது முயன்று வருகின்றன. இத்தகைய ஒரு சூழலில் வெளிநாடுகளிலும் சானா தன்னுடைய முயற்சிகளை முன்னெடுத்து இருக்கிறது என்று அதிபர் குறிப்பிட்டார்.
2018ல் ஐநா பொருளியல் சமூக மன்றத்தின் ஓர் உறுப்பினர் என்ற முறையில் சானாவுக்குச் சிறப்பு ஆலோசனை அந்தஸ்து வழங்கப்பட்டது. அது முதல் ஐநா போதைப்பொருள் ஆணையம் நடத்தும் நிகழ்ச்சிகளின்போது தீவிர செயல் அமைப்பாக சானா இருந்து வந்திருக்கிறது என்பதை அதிபர் ஹலிமா சுட்டிக்காட்டினார்.
அனைத்துலக ஆலோசனைப் பணிகள் மூலம் சானா சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்பு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூற முடிந்துள்ளது.
போதைப்பொருள் அற்ற சிங்கப்பூரே தனது விருப்பம் என்பதை அனைத்துலக அளவில் சானா பகிர்ந்துகொண்டு இருக்கிறது என்றும் அதிபர் குறிப்பிட்டார்.