நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கடைப்பிடிக்கும்போது உணவை உற்பத்தி செய்வதற்கான செலவு கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் இந்தோனீசியா போன்ற நாடுகளில் உணவு உற்பத்தி செலவு 80 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என்று உலகளவில் முன்னுரைப்புகளை வழங்கும் நிறுவனமான 'ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்' கூறியுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் இல்லாமல் இருப்பதற்கான நடைமுறைகளை உலக நாடுகளின் அரசாங்கங்கள் செயல்படுத்திவரும் வேளையில் இந்நிலை உருவாகலாம் என்று 'ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்' குறிப்பிட்டது.
நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கடைப்பிடிக்கும்போது அது உணவு விநியோகச் சங்கிலியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
அதைத் தவிர்க்க வட்டார அளவில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தாவிட்டால் உணவு விலை பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும் என்று 'ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்' நிறுவனத்தின் ஆசிய கண்டத்திற்கான ஆலோசனை பிரிவின் தலைவர் டாம் ரோஜர்ஸ் கடந்த வியாழக்கிழமையன்று (23 ஜூன்) இணையம்வழி நடைபெற்ற சந்திப்பில் எச்சரித்தார்.