துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஆடம் ரோட்டிற்கு வெளியேறும் வழியருகே நேர்ந்த விபத்தையடுத்து ஒன்பது பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஒரு டாக்சியும் இரண்டு கார்களும் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து நேற்றுக் காலை ஒன்பதரை மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சம்பவத்தில் டாக்சி ஓட்டுநரான 56 வயதுப் பெண்ணுடன் அதில் பயணம் செய்த இரு பெண்களும் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. இருவரின் வயது முறையே 43 மற்றும் 63. மேலும் கார் ஓட்டுநரான 66 வயது ஆடவரும் அவருடன் காரில் பயணம் செய்த ஐந்து பயணிகளும் காயமடைந்தனர்.
அவர்கள் 54 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
காயமடைந்தவர்களில் ஒருவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மற்ற எட்டு பேரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்தையடுத்து ஸ்டீவன்ஸ் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

