தென்கிழக்காசியாவில் உணவு விலை உயர்வுக்கு மோசமான வானிலையும் ஒரு காரணம் என்பதால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது இதற்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இதன்மூலம் உணவு உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும் என்று அண்மை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
'ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்' நிறுவனம் நடத்திய ஆய்வில் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தோனீசியா போன்ற நாடுகளில் உணவு உற்பத்திக்கான செலவு 80 விழுக்காடுவரை உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
அரசாங்கங்கள் கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்டும் முயற்சியில் விதிக்கும் கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
பருவநிலை மாற்றம் உணவுப் பொருள்களின் விலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வின் முடிவுகள் சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற காணொளிக் கருத்தரங்கில் பகிரப்பட்டன.
தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு டிசம்பரிலும் வியட்னாமில் 2019 பிப்ரவரியிலும் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளால் அப்போது உணவு விலை ஏறத்தாழ ஆறு விழுக்காடு உயர்ந்ததை ஆய்வு சுட்டியது. வரும் ஆண்டுகளில் இத்தகைய மோசமான வானிலை அடிக்கடி ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத நிலை இதனை மாற்றியமைக்கக்கூடும் என்றாலும் நீடித்த நிலைத்தன்மைக்கான நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சூரியசக்தித் தகடுகளைப் பயன்படுத்த ஊக்குவித்தல், வீணாகும் உணவில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்தல் போன்றவற்றைப் பின்பற்றுவதோடு வேளாண் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு விவசாயிகள் விரைவில் மீண்டுவர உதவுதல் ஆகியவற்றில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்; வருவாயில் பெரும்பகுதியை உணவுக்குச் செலவிடும் ஏழ்மையான குடும்பங்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கருத்தரங்கில் கேட்டுக்கொள்ளப்பட்டது.