கி. ஜனார்த்தனன்
பிரான்சில் வளர்ந்து 'ஹிப் ஹாப்' நடனக்கலையைக் கற்ற உஷா ஜெய், 25, தமிழர் மரபுடன் இணைய வேண்டும் என விரும்பி ஐந்து ஆண்டுகளிலேயே பரத
நாட்டியத்தைக் கற்றுக்கொண்டார்.
இப்போது இவர் தயாரித்து இவரே ஆடும் பரதநாட்டியக் காணொளிகள் உலகெங்கும்
பலரால் ரசிக்கப்படுகின்றன. இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட குமாரி உஷா, பிரான்சிலேயே வளர்ந்து தற்போது முழுநேர நடனக் கலைஞராகப் பணியாற்றுகிறார்.
"பரதநாட்டியம் என்னைத் தொடர்ந்து பரவசம் அடையச் செய்யும் ஒரு கலை," என்று அவர் கூறினார்.
கேனன் கெட்டோ-ஸ்டைல் என்பவரிடம் 'ஹிப் ஹாப்'
நடனத்தை 15 வயது முதல் கற்ற உஷா, 20 வயதில் பரதநாட்டியத்தை அந்துஷா உதயக்
குமாரிடம் கற்றார்.
இந்த இரண்டு பாணிகளையும் நயமாகக் கலந்து ஆடும் உஷாவின் காணொளிகள்,
தனித்துவம் வாய்ந்தவை.
அண்மையில் தாம் வெளியிட்ட காணொளிகளைப் பார்த்த அமலா பால், மாதவன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்பிரபலங்கள் காணொளிகளைப் பகிர்ந்ததுடன் பாராட்டி கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
இவர்களுடன் உலகெங்கும் உள்ள கலைஞர்களும் ரசிகர்களும் தம் படைப்புகளை ரசிப்ப
தாகக் கருத்துப்பதிவு செய்யும்போது மனம் மிகவும் நெகிழ்வதாக உஷா கூறினார்.
2013ஆம் ஆண்டில் நடனக் காணொளிகளை வெளியிடத் தொடங்கிய உஷா, தமது
உள்ளுணர்வுபடி செயல்படுகிறார்.
"பார்வையாளர்களுக்குப் படைப்புகளை உருவாக்கும் முன்பு நம் சொந்த திருப்திக்காக அவற்றை உருவாக்கவேண்டும். அப்போதுதான் நம் படைப்புகளில் உண்மை இருக்கும்" என்று அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
பாடல்களுக்குள் இரண்டறக் கலந்தால்தான் தம் கற்பனைச் சிறகுகள் சிறகடித்துப் பறக்கும் என்று அவர் கூறினார்.
காணொளி தயாரிப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்தாலும் அதனைப் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்ய விரும்புவதாகக் கூறினார்.
அண்மையில் வெளிவந்த 'ஹைப்ரிட் பரதநாட்டியம்'
நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தை முழுமையாகத் தயாரிப்பதற்கு ஒரு வாரம் ஆனதாகக் கூறினார்.
"ஐந்து நாள் பயிற்சிக்குப் பிறகு காணொளி எடுக்கத் தொடங்கினேன். ஒரு நாளில் காணொளி எடுத்து அதனைத் தொகுக்க ஐந்து நாட்கள் ஆயின," என்று அவர் கூறினார்.
ஏ.ஆர். ரஹ்மான், ஷான் வின்சன்ட் டி பால், எம்.ஐ.ஏ உள்ளிட்ட புகழ்பெற்ற உலகத் தமிழ்க் கலைஞர்களுடன் பணியாற்றிய உஷா ஜெய், யங் ராஜாவுடன் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.