யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூரின் ஆண்கள் பனிச்சறுக்கு ஹாக்கி அணி தனது இளையர் அணியை இம்மாத இறுதியில், அனைத்துலக பனிச்சறுக்கு ஹாக்கி சங்கம் நடத்தும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியா மற்றும் ஓஷியானியா வெற்றியாளர்
போட்டிக்கு அனுப்ப இருக்கிறது.
இந்த இளையர் அணி அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதல்முறை.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருந்த இப்போட்டி கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போட்டி நேற்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் தொடங்கி அடுத்த மாதம் 2ஆம் தேதி நிறைவடைகிறது. சிங்கப்பூர், ஹாங்காங்,
இந்தியா, இந்தோனீசியா ஆகிய நாடுகள் 'பி' பிரிவில் இடம்பெறு கின்றன. மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, ஐக்கிய அரபு
சிற்றரசுகள் ஆகிய குழுக்கள் 'ஏ' பிரிவில் போட்டியிடுகின்றன.
இந்தோனீசிய அணியுடன் சிங்கப்பூர் அணி நேற்று மோதியது. இன்று இந்தியாவுடனும் 28ஆம் தேதி தாய்லாந்துடனும் அது போட்டியிடுகிறது.
இப்போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் 16 வயது
முத்துக்குமார் கார்த்திகேயன், இளம் வயதிலேயே நாட்டுக்
காகக் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்தார்.
ஒன்பது வயதில் பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட தொடங்கிய கார்த்திகேயன், பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்துள்ளார். இவர் இவ்வாண்டு சிங்கப்பூர் ஆண்கள் பனிச்சறுக்கு ஹாக்கி அணியின் ஆக இளைய ஆட்டக்காரராக இணைந்தார்.
தற்போது ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் பயின்று வரும் அவர், பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டில் தாக்குதல்
ஆட்டக்காரராக விளையாடு
கிறார். இனி வரும் ஆண்டு
களிலும் தொடர்ந்து பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டில் ஈடுபடப்போவதாகவும் எதிர்காலத்தில் பொருளியல் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளதாகவும் கார்த்திகேயன் கூறினார்.