சிறப்புத் தேவைகள் உள்ள சிறாருக்குப் புதிய சமூக நூலகம்
சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களுக்காக புதிய சமூக நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதற்கு பிளே.ஏபல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறப்புத் தேவைகள், உடற்குறை உள்ள சிறுவர்கள் இந்த இலவச சமூக வள நூலகத்தைப் பயன்படுத்தலாம். இந்த நூலகம் மார்கரெட் டிரைவ் வட்டாரத்தில் உள்ள ரெயின்போ நிலையத்தில் அமைந்துள்ளது.
தொட்டுணர்ந்து கற்றுக்கொள்ள சிறுவர்களுக்கு உதவும் பல்வகை விளையாட்டுப் பொருள்கள், புதிர்கள் போன்றவை நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூலகத்துக்குச் செல்பவர்கள் வைப்புத் தொகையாக $20 செலுத்திவிட்டு அதிகபட்சம் நான்கு பொருள்களை இரவல் பெறலாம். மூன்று வாரங்களுக்குள் அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். 'பி கைண்ட் எஸ்ஜி' அறநிறுவனத்தின் நிறுவனரான திருவாட்டி ஷேரி சூனும் 'ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஏஎஸ்டி ஃபெமிலிஸ்' எனும் பிரபல ஃபேஸ்புக் பக்கத்தின் திருவாட்டி சுன் மைலின் இணைந்து இந்த அறிமுகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகளுக்குத் தேவையான கற்றல் சாதனங்களை அவர்களது பெற்றோர் புதிய நூலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
வேலையிடத்தில் பாகுபாட்டை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள்
வேலையிடப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வேலையிடங்களில் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுதொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வேலையிடங்களில் கர்ப்பிணிகளுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்த புகார்களின் எண்ணிக்கை 48 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவேர் எனப்படும் மகளிர் செயல், ஆய்வுச் சங்கம் கூறியது.
2020ஆம் ஆண்டில் மாதத்துக்குச் சராசரியாக நான்கு புகார்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை ஆறாகவும் இவ்வாண்டு எட்டாகவும் உயர்ந்துள்ளது.
புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிவது சிரமம் என்று சங்கத்தின் வேலையிடப் பாகுபாடு தடுப்பு ஆலோசனை நிர்வாகியான திருவாட்டி அபூர்வா ஷுக்லா தெரிவித்தார்.
நியாயமான, வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டி நெறிமுறைகளை அரசாங்கம் கடந்த ஆண்டு சட்டமாக்கியது. வேலையிடப் பாகுபாடு ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.