அணுக்க உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாக, வீட்டில் இருந்த தம்முடைய 17 வயது மகளுக்கு போதைப்பொருள் வழங்கிய 37 வயது மாது ஒருவருக்கு நேற்று ஏழு ஆண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி இந்தக் குற்றம் நிகழ்ந்தது. போதைப்பொருள் தொடர்பாக மேலும் பல குற்றங்களையும் அவர் புரிந்தார்.
போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். அந்த மாதின் பெயரை வெளியிட்டால் அவருடைய மகளின் அடையாளம் தெரிந்துவிடக்கூடும் என்பதால், அவர் பெயர் வெளியிடப்படவில்லை. பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ளோர் சிறார், இளையர் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றனர்.
தம் மகளிடம் 'ஐஸ்' போதைப்பொருளை வழங்கி வீட்டில் அதை உட்கொள்ள அந்த மாது அனுமதித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜோசஃப் குவீ நீதிமன்றத்தில் நேற்று கூறினார். கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இரவு 11 மணியளவில், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தாயும் மகளும் கைது செய்யப்பட்டனர்.