விமர்சனங்கள் தவறானவையாகவோ நியாயமற்றவையாகவோ இருந்தால் அரசாங்கம் மரியாதையான முறையில் அவற்றை நிராகரிப்பதுடன் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு சிங்கப்பூரர்களுக்கு உரிய விளக்கம் தருவதில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
மக்களுக்குச் சேவையாற்றுவது, அவர்களுக்கு உகந்ததைச் செய்வது, நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்வது ஆகியவையே அரசாங்கத்தின் முக்கியக் கடமைகள்.
எனவே எது சரி, எந்தப் பாதையில் செல்லவேண்டும், நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது போன்றவை குறித்து அரசாங்கம் உறுதியாக முடிவெடுக்கவேண்டும் என்றார் திரு லீ.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்காக ருவாண்டா சென்றிருந்த பிரதமர் லீ, அந்நாட்டு அதிபர் பால் ககாமேயுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
ருவாண்டா, சிங்கப்பூர் இரண்டுமே வளர்ந்துவரும் வேளையில் விமர்சனங்களையும் குறைகூறல்களையும் எதிர்கொண்டதைச் சுட்டிய செய்தியாளர்கள் அவற்றுக்கிடையே நாட்டின் முன்னுரிமையைத் தொடர்ந்து வெற்றியடைய எது உந்துதலாக இருந்தது என்று பிரதமர் லீயிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளிக்கையில் திரு லீ இவ்வாறு கூறினார்.