கிளார்க் கீயில் உள்ள ‘ஸூக்’ இரவு பொழுதுபோக்குக் கூடத்திற்கான நுழைவுச்சீட்டு விற்பனையில் மோசடி நடந்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடியில் சிக்கியோர் கடந்த மே மாதம் முதல் $2,300 வரை பணத்தைப் பறிகொடுத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை குறைந்தபட்சம் 10 புகார்கள் வந்ததாகவும் காவல்துறை செவ்வாய்க்கிழமையன்று (28 ஜூன்) வெளியிட்ட பொதுமக்களுக்கான எச்சரிக்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறுந்தகவல் தளமான டெலிகிராமில் ‘எஸ்ஜி கிளப்பிங்’ போன்ற குழுக்கள் ‘ஸூக்’ செல்வதற்கான நுழைவுச்சீட்டுகளை விற்பதாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்வதாகவும் நுழைவுச்சீட்டுக்கான பணம் செலுத்திய பிறகு அவர்கள் தலைமறைவாகிவிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் நுழைவுச்சீட்டுகளை வாங்குமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அதிலும், மலிவு விலை நுழைவுச்சீட்டுகளை இணையம் மூலம் வாங்குவது ஆபத்தானது என்றது அது.