கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள் 2026, 2027ஆம் ஆண்டுகளில் தெங்கா, செங்காங், அங் மோ கியோ வட்டாரங்களில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகங்களில் திறக்கப்படும்.
இவற்றையும் சேர்த்து கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை 60ஆக உயரும்.
பைனியர் தொடக்கப்பள்ளி 2026ல் தெங்கா வட்டாரத்திற்கு இடமாற்றம் செய்யப்படும்போது, அங்கு கல்வி அமைச்சின் பாலர் பள்ளி திறக்கப்படும்.
செங்காங் வட்டாரத்தில் உள்ள ரிவர்வேல் தொடக்கப்பள்ளியிலும் அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள டவுன்ஸ்வில் தொடக்கப்பள்ளியிலும் 2027ஆம் ஆண்டு புதிய பாலர் பள்ளிகள் திறக்கப்படும்.
ஒவ்வொரு பாலர் பள்ளியிலும் மாணவர்களுக்கு 120 முதல் 200 இடங்கள் ஒதுக்கப்படும்.
கல்வி அமைச்சின் 60 பாலர் பள்ளிகளுள் 43 பள்ளிகள் செயற்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 17 பள்ளிகள் 2023க்கும் 2027க்கும் இடைப்பட்ட காலத்தில் திறக்கப்படும். இதனால், 2027ல் பாலர் பள்ளிகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 8,300ஆக உயரும்.
2026, 2027ஆம் ஆண்டுகளில் திறக்கப்படும் பாலர் பள்ளிகளுக்குப் பதிவு செய்ய விரும்புவோர் அப்பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டு பிப்ரவரியில் பதிவு செய்துகொள்ளலாம்.
மேல் விவரங்கள் 2025, 2026ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வெளியிடப்படும்.
ஐந்து, ஆறு வயதுள்ள மாணவர்களுக்கு, கட்டுப்படியாகும் கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல் குழந்தைப் பருவக் கல்வி செயல்முறைகளின் தரத்தை உயர்த்துவதும் இந்தப் பாலர் பள்ளிகளின் நோக்கம்.
கல்வி அமைச்சின் அனைத்துப் பாலர் பள்ளிகளிலும் சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று தாய்மொழிகள் கற்பிக்கப்படும்.
தொடக்கத்திலேயே இருமொழிக் கல்வியை ஊக்குவிப்பதையும் பிற்காலத்தில் மொழிகளைக் கற்பதற்கான அடித்தளத்தை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு பாலர் பள்ளிகளில் தாய்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
தொடக்கப்பள்ளிகளில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த தொடக்கப் பள்ளிகளிலேயே நேரடிச் சேர்க்கை வழங்கப்படும்.
இதனால், பிள்ளைகள் பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்பள்ளிக்குச் செல்லும்போது ஏற்படும் நிலை மாற்றம் சுமுகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

