சிங்கப்பூரின் நீர் நிர்வாகம் எரிசக்தியையே பெரிதும் சார்ந்துள்ளது என்பதால் நீருக்கான தேவையையும் நீர்ச் சூழமைப்புக்கான செயலாற்றையும் ஆதரிக்க பசுமை எரிசக்தி அவசியம். அதனை உருவாக்க மிதக்கும் சூரிய மின்தகடுகளை அமைக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கடந்த பதினைந்து ஆண்டு
களாக நீரை மறுசுழற்சி செய்யவும் கட்டுப்படியான விலையில் அதிகத் தண்ணீரை உற்பத்தி செய்யவும் நுண்வடிகட்டி முறை உதவி வந்தது. ஆனால், அது சிங்கப்பூரின் எரிசக்தி மீள்திறன் ஆதரவைச் சார்ந்துள்ளது என்றார் அவர்.
டாக்டர் விவியன் போர்ச்சுக்
கீசியத் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும் ஐநா பெருங்கடல் ஆதரவு மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். அதிகாரத்துவ வருகை மேற் கொண்டு லிஸ்பன் சென்றிருக்கும் அவர், சனிக்கிழமை வரை அங்கிருப்பார்.
தண்ணீர் தொடர்பாக அங்கு நடைபெற்ற அமைச்சர்நிலை வட்டமேசை உயர்மட்டக் கூட்டத்திற்கு இணைத் தலைமை ஏற்று டாக்டர் விவியன் பேசினார்.
"தற்போது 1,000 லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்க, கன மீட்டருக்கு 3.5 கிலோவாட் என்ற அளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது. இதனை 2 கிலோவாட் ஆகக் குறைப்பதற்கான திட்டங்களில் சிங்கப்பூர் பணியாற்றி வருகிறது," என்றார் அவர்.
தெங்கா நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சூரியத் தகடு மின்னழுத்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பை அவர் உதாரணமாகச் சுட்டினார். அந்த மின்தகடுகள் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வல்லமை பெற்றவை.
நூறு விழுக்காடு முழுமையான பசுமை நீர்வள முறையைக்கொண்டிருக்கும் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்றார் டாக்டர் விவியன். உலகின் ஆகப்பெரிய உள்நாட்டு மிதவை சூரியத்தகடு மின்முறையைக் கொண்ட பகுதிகளில் தெங்கா நீர்த்தேக்க அமைப்பும் ஒன்று.
அமைச்சர் விவியன் கூறுகையில், "இது வெறும் பசுமை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நமது நீர்
வளத் தேவைக்கான எரிசக்தி அனைத்தையும் உற்பத்தி செய்யும்போது அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் மீள்திறன் தாக்கங்களும் உள்ளதைக் கவனிக்க வேண்டும்.
"தண்ணீருக்கான சரியான விலையைப் பெறுவதும் மற்றோர் ஆற்றல்மிக்க நீர் நிர்வாகம். சரியான விலை இன்றி முறையான நீர்ப் பங்கீட்டைச் செய்ய முடியாது. விலையை நிர்ணயம் செய்வதற்கான சிங்கப்பூரின் நீண்டகால அணுகுமுறை என்பது, தனியார் துறைப் பங்காளித்துவத்திற்கு நீண்டகால உத்தரவாதம் இருப்பதை உறுதிசெய்கிறது. சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்ட நீர் நிர்வாக நிறுவனங்களும் 25 நீர் ஆய்வு நிலையங்களும் உள்ளன.
"சிங்கப்பூரில் ஒரே அமைச்சின்கீழ் நீர் நிர்வாகம் செய்வதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் விநியோகம் தொடங்கி, பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மீட்பு, வடிகால், வெள்ளம், கடலோரப் பாதுகாப்பு போன்றவை வரை ஒவ்வொரு துளி நீரையும் பெற்று, பயன்படுத்தி, மறுபயனீடு செய்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது," என்றார் அமைச்சர்.

