கடைகளில் பொருள் வாங்குவோரின் விருப்பங்கள் மாறிவருவதால் குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடைகள் புதிய வர்த்தகப் போக்குகளைச் சந்திப்பதில் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும். கொள்ளைநோய் காரணமாக கடந்த ஈராண்டுகள் கடைக்காரர்களுக்குச் சிரமமாக இருந்த
போதிலும் வாடிக்கையாளர்களின் மாற்றப்போக்கால் அவர்களின் சிரமம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
சிங்கப்பூர் குடியிருப்பு வட்டார நிறுவன உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
"கொள்ளைநோய்க்குப் பின்னர் நிறைய வாடிக்கையாளர்கள் இணைய வர்த்தகத்துக்கு மாறி
வருகிறார்கள். இன்னும் சில வாடிக்கையாளர்கள் நவீனமயமிக்க கடைத்தொகுதிகளுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடைக்காரர்கள் இந்தப்போக்கைக் கவனத்தில் கொண்டு தொடர்ந்து நீடித்து நிலைக்க முயலவேண்டும்," என்றார் திரு லீ.
இதுபோன்ற நிலைமையைச் சமாளித்து உதவ ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அவரவர் பகுதிகளில் உள்ள கடைகள் தங்களது தனித்தன்மையை இழக்காமல் புத்தாக்கத்தை எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்று ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்களிடம் கேட்கப்பட்டது.
திரு லீ மேலும் கூறுகையில், "இதுபோன்ற கடைகள் உள்ளூர் சமூகங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்கம்பக்கத் தாருடன் சமூகப் பிணைப்பை வலுவாக்குவதில் இவை உதவுகின்றன. மேலும், தங்களது வீட்டுக்கு அருகிலேயே வேலை செய்ய விரும்பும் மூத்தோருக்கும் மற்றவர்களுக்கும் இவை வேலை வழங்கி உதவுகின்றன," என்றார்.
நேர்காணல்கள் வழியாகவும் கருத்துத் திரட்டல்கள் வழியாகவும் 2,800க்கும் மேற்பட்டோர் ஆய்வில் கலந்துகொண்டனர். குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள், வர்த்தகத் தலைவர்கள் ஆகியோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
அதிக உற்பத்தித்திறனுடன் திகழ மின்னிலக்கத்துக்கு மாறுதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் இதுபோன்ற கடைகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று இவர்களில் சிலர் கூறினர்.
இதுபோன்ற கருத்துகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் இதுதொடர்பான பரிந்துரைகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் திரு லீ கூறினார்.
"மாறிவரும் வர்த்தகச் சூழல்
களைக் கடைப்பிடிப்பது சில கடைக்காரர்களுக்கு எளிதாக இல்லாவிட்டாலும் வேறுசிலர் அதனை வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
"இன்னும் சில கடைக்காரக்கார்கள் அனைத்துலக அளவில் முன்னேறியுள்ளனர். 'ஓல்ட் சாங்க் கீ' இதற்கு ஓர் உதாரணம். 1956ல் ரோச்சோர் அருகே மெக்கன்ஸி ரோடு காப்பிக்கடையில் சிறிய கடையாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கு கிளைகளை அமைத்ததோடு ஜகார்த்தா, லண் டன், பெர்த் என முன்னேறி உள்ளது," என்றார் திரு லீ