முதலாம் மின்னற்படை பட்டாளம் தொடர்ந்து 19 ஆண்டாக சிறந்த போர்ப் படைக்கான போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இப்பட்டாளம் இதுவரை 36 முறை இப்போட்டியில் வெற்றி கண்டுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் சிறந்த படைகளுக்கான போட்டியில் சிறந்த ஆகாயப் படையாக 143ஆம் விமானப் போர்ப்படை, சிறந்த போர்க் கவச வாகனப் படையாக 474ஆம் போர்க் கவச வாகனப் படை ஆகிய படைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதலாம் மின்னற்படைப் பட்டாளத்தைச் சேர்ந்த கார்ப்பரல் நடராஜன் பிரேம்சேகர், 20, தற்போது இச்சாதனை பெருமையளித்தாலும் அதற்காகப் பாடுபட்டபோது மிகவும் கடினமாக இருந்ததெனக் கூறினார். தேசிய சேவையாளரான இவர், சோதனையைவிட அதற்கான பயிற்சிகள் மிகவும் சோர்வளித்ததாகக் கூறினார். காடுகளில் உடலையும் மனதையும் வருத்தும்படியான பயிற்சிகளில் ஈடுபட்டது, அப்போது சற்று சிரமமாகத் தோன்றினாலும் இப்போது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
ஐந்து நாட்கள் கடினமாக உழைத்துவிட்டு வார இறுதிகளில் வீடு திரும்புகையில், ஓய்வு எடுப்பதிலேயே பெரும்பாலான நேரம் செலவாகிவிடுவதால், தன் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட முடியாமல் போனது வருத்தமளிப்பதாக கூறினார் பிரேம்சேகர்.
ஆனால், தற்போது இந்த அங்கீகாரம் பெற்றது அத்தகைய தியாகங்களுக்கு அர்த்தம் அளிப்பதுபோல் தோன்றுவதாக இவர் குறிப்பிட்டார்.
இவர் பங்கேற்ற போர்ப் பயிற்சி, காயமடைந்தவர்களை வெளியேற்றும் பயிற்சி போன்றவை தன்னை உடலளவிலும் மனதளவிலும் திடப்
படுத்தியுள்ளதாக பிரேம்சேகர் கூறினார்.தமது அடிப்படை விமானப் பயிற்சியிலும் சிறப்பு விமானப் பயிற்சியிலும் சிறந்த மாணவ விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன் அக்ஷய் சர்மா, 31, மூன்று ஆண்டுகளாக தனது விமானப் போர்ப் படை சிறந்த படையாகத் தேர்வுபெற்றுவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
இச்சோதனை தனது படையின் பறக்கும் திறனையும் வல்லமையையும் சோதித்ததாகவும், அதற்கு பயிற்சி பெற பல மாதங்கள், வீரர்கள் பலர் பயிற்சி செய்ததாகவும் இவர் குறிப்பிட்டார்.
இந்தச் சோதனைக்காக ஆயத்தப்படுத்திக்கொள்ளும்போது, தானும் தனது படை உறுப்பினர்களும் தங்களுக்கிடையிலான சகோ தரத்துவத்தை வளர்த்துக்கொண்டதாக அக்ஷய் கூறினார். திறன்மிக்க விமானப் போர்ப் படைகளுடன் போட்டியிட்டு வெல்ல நல்ல திட்டமைப்பு முக்கியமாக அமைந்ததென்றும் இவர் பகிர்ந்துக்கொண்டார்.
சிறந்த போர் கவச வாகனப் படையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 474ஆம் போர் கவச வாகனப் படையைச் சேர்ந்த போர்க்கால படைவீரர், லெப்டினென்ட் நாகராஜன் ராதா, 30, தமது உயர் அதிகாரியின் பொறுப்பைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், தான் சிறிது சிரமங்களை எதிர்நோக்கியதாக கூறினார்.
தமது உயர் அதிகாரி தனிப்பட்ட காரணங்களினால் இத்தேர்வில் பங்கேற்க முடியாமல் போனதாகவும் அதன் விளைவாக தாம் அப்பணியை எடுத்துச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் இவர் கூறினார். ஆனால், தமது படையினரும் உயரதிகாரிகளும் தமக்கு ஆதரவு வழங்கி பணியைச் சிறப்பாகச் செய்ய உதவியதாக இவர் கூறினார்.
இவ்வாறு எதிர்பாரா சூழ்நிலை கள் பல ஏற்பட்டாலும் அதை வெற்றி கரமாகப் பூர்த்தி செய்து, இந்த அங்கீ காரத்தைப் பெறுவது திருப்தியளிப்ப தாக இவர் தெரிவித்தார்.