கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் மரணம் மிக அரிதானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தை ‘என்செஃபாலிடிஸ்’ எனப்படும் மூளை வீக்கத்தால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது. குழந்தைக்கு கொவிட்-19 கிருமியுடன் மேலும் இரண்டு கிருமிகள் தொற்றியிருந்ததாக அமைச்சு தெரிவித்தது.
மூன்று வெவ்வேறு கிருமித் தொற்று ஒரே சமயத்தில் ஏற்படுவது மிகவும் அரிதானது என்று அனைத்துலக தொற்றுநோய்ச் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் பால் தம்பையா கருத்துரைத்தார். மாண்ட குழந்தைக்கு ஒரு விதமான நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினை இருந்திருக்கக்கூடும் என அவர் கூறினார்.
கொவிட்-19 கிருமித் தொற்றினால் மட்டுமே குழந்தை மாண்டிருக்க சாத்தியம் இல்லை என தாம்சன் குழந்தை மருத்துவ நிலையத்தின் குழந்தை மருத்துவர் டாக்டர் லிம் யாங் செர்ன் குறிப்பிட்டார். பல கிருமிகள் ஒன்றுசேர்ந்து குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதித்திருக்கக்கூடும் என அவர் சொன்னார்.
இம்மாதம் 21ஆம் தேதி கேகே சிறார், மகளிர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் குழந்தை கொண்டுசெல்லப்பட்டான். குழந்தை பின்னர் சுயநினைவை இழக்க மறுநாள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டான். பிள்ளையின் மூளை வீங்கியிருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் அதனைச் சரிசெய்ய ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தனர்.
உலகில் கிருமித் தொற்றால் ஏற்பட்ட 4.4 மில்லியன் மரணங்களில் 0.4 விழுக்காடு 20 வயதுக்குக் குறைவானவர்களிடையே நிகழ்ந்ததாக ஐக்கிய நாட்டின் சிறார் நிதியமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பெரும்பாலான சிறுவர்களுக்கு கிருமித் தொற்றும்போது வழக்கமான சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சில சிறார்களுக்கு ஆஸ்துமா, வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது.
அரசாங்கம் பரிந்துரைக்கும்போது, சிறுவர்களும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தொற்று பாதிப்பால் ஏற்படக்கூடிய கடும் விளைவுகளிலிருந்து அது பாதுகாப்பு அளிக்கும் எனக் கூறப்பட்டது.