மியான்மாரிலிருந்து வந்த தமது இல்லப் பணியாளரைக் கொடுமைப்படுத்தி அவர் சாகக் காரணமான காயத்திரி முருகையன், தமது தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறையில் உள்ள காயத்திரிக்கு, அந்தக் குற்றத்துக்காக 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவாட்டி பியாங் இங்காய் டோனை வதைத்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் இல்லதரசியான காயத்திரிக்கு கடந்த ஜூன் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் அளவுக்கு அதிகம் என்பது மிகத் தெளிவு என்றும் 12 முதல் 15 ஆண்டு சிறைதான் பொருத்தமானது என்றும் காயத்திரி தமது மேல்முறையீட்டு மனுவில் வாதிட்டிருந்தார்.
அச்செயலுக்காக தாம் மனம் இரங்கியதையும் வருத்தப்பட்டதையும் தமது மனநிலைப் பிரச்சினையையும், தம்மைச் சமநிலை தவற வைத்த காரணங்களையும் தண்டனை விதித்த நீதிபதி கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், தாம் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் ஒப்புக்காண்டால் தமது தாயார் பிரேமா எஸ். நாராணயசாமியின் தண்டனை விதிப்பு விரைந்து நடத்தப்படும் என்று அழுத்தத்தை உணர்ந்ததாகவும் காயத்திரி கூறினார்.
திருவாட்டி பிரேமா இல்லப் பணியாளரை வதைத்தற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.
ஆனால் இந்த வாதங்கள் மேல்முறையீட்டு நீதிபதிகளிடம் எடுபடவில்லை. அவர் வாதங்களில் எந்த சரியான அம்சங்களும் இல்லை என்று அவர்கள் கூறினர்.
காயத்திரியின் செயல் எவ்வளவு கடுமையானது என்பதையும் அவர் மனநிலைப் பிரச்சினையையும் கருத்தில்கொண்ட பின்னர்தான் நீதிபதி தண்டனை விதித்ததாக மேல்முறையீட்டு நீதிபதி கூறினார்.
உயிரிழந்த பெண்ணை நடத்திய விதத்தை காயத்திரி நியாயப்படுத்த முயல்கிறார் என்று கூறிய மேல்முறையீட்டு நீதிபதி, அவர் தம் செயலுக்காக வருந்தவில்லை என்றார்.
காயத்திரி தனது குற்றச்செயலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எல்லாரையும் குற்றம் சொல்ல முயல்கிறார் என்று மேல்முறையீட்டு நீதிபதி குறிப்பிட்டார்.
தமது மனநிலைப் பிரச்சினை காரணமாக மற்றவர்களை விட சிறையில் தாம் அதிகம் சிரமப்படப் போவதாக காயத்திரி கூறியதையும் நீதிபதி மறுத்தார்.

