மியன்மார் பணிப்பெண் இறக்கும் அளவுக்கு துன்புறுத்திய காயத்திரி முருகையனின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் அவர், தண்டனையைக் குறைக்கும்படி கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது என்றும் 12 முதல் 15 ஆண்டு சிறைத் தண்டனை ஏற்புடையது என்றும் மனுவில் அவர் கூறியிருந்தார்.
ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துவிட்டது.
ஓராண்டுக்கு முன்பு தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி தான் மனநலம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார் என்று 42 வயது காயத்திரி வாதிட்டார்.
பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் தனது தாயாரான 63 வயது பேமா எஸ். நாராயணசாமிக்கு தண்டனை விதிப்பது விரைவுபடுத்தப்படும் என்று எண்ணி குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாக அவர் கூறினார்.
அவரது தாயார் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
தண்டனை விதித்த உயர் நீதி மன்ற நீதிபதி காயத்திரியின் நடத்தையையும் மனநலத்தையும் கவனமாக பரிசீலித்ததாக நீதிபதி ஆண்ட்ரு பாங் குறிப்பிட்டார்.
"பாதிக்கப்பட்டவருக்கு எதிரான தனது நடத்தையை இதன்மூலம் அவர் நியாயப்படுத்த முயற்சி செய்கிறார்.
"காயத்திரியை வழக்கறிஞர் ஒருவர் பிரதிநிதித்துள்ளார். இதனால் குற்றத்தை ஒப்புக்கொள்ள தான் அழுத்தத்திற்கு உள்ளானதாக அவர் கூறுவதற்குப் போதுமான ஆதாரம் இல்லை," என்று நீதிபதி பாங் தெரிவித்தார்.
சிறையில் பெரும்பாலானவர் களைவிட தனது மனநிலை காரணமாக அதிகம் அவதிப்படுவதாகவும் அவர் கூறுவதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
சிறையில் தான் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மேல்முறையீட்டில் காயத்திரி புகார் கூறியிருந்தார். ஆனால் இதற்கும் தண்டனை விதிப்புக்கும் தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த 24 வயது பணிப்பெண்ணை பட்டினி போட்டு துன்புறுத்தியதற்காக கடந்த ஆண்டு ஜூனில் காயத்திரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நோக்கமற்ற மரணம் விளைவித்த குற்றச்சாட்டு உட்பட தன் மீது சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.
அவர் மீதான இதர 87 குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
2015 மே 28ஆம் தேதியிலிருந்து பணிப்பெண் அவரது வீட்டில் வேலை செய்யத் தொடங்கினார்.
நாற்பது விழுக்காடு உடல் எடையை இழந்த பணிப்ெபண் 2016 ஜூலை 26ஆம் தேதி இறந்தார்.
அப்போது அவரது எடை 24 கிலோவுக்கு குறைந்திருந்தது.

