சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளுக்கும் சமூகத் திட்டங்களுக்கும் சென்றுவருவதற்கான சிறப்புப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் நாளை முதல் குறைவான கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.
'இடிஎஸ்' எனப்படும் 'எனேபிலிங் டிரான்ஸ்போர்ட்' மானியம் உயர்த்தப்படுவது இதற்குக் காரணம். இதனால் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பலனடைவர் என்று கருதப்படுகிறது.
மானியத் தொகை கிட்டத்தட்ட 20 விழுக்காடு உயர்த்தப்படுவதால் அரசாங்கத்துக்கு ஓர் ஆண்டில் இரண்டு மில்லியன் வெள்ளி கூடுதலாகச் செலவாகும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது.
அக்கறை மிக்க அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயமாக சிங்கப்பூரை அமைக்கும் நோக்குடன் வகுக்கப்பட்ட 'எனேபிலிங்' பெருந்திட்டம் 2030ன் ('இஎம்பி2030') ஓர் அங்கமாக மானியத் தொகை உயர்த்தப்படுவதாக அமைச்சு கூறியது. ஒருங்கிணைந்த சமுதாயத்திற்கு முழுமையாகப் பங்களிக்கும் விதத்தில் உடற்குறையுள்ளோருக்கு வலுவூட்டுவது இத்திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் 'இஎம்பி2030' வழிகாட்டிக் குழுவின் தலைவருமான எரிக் சுவா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மானிய உயர்வால், 800 வெள்ளி வரை தனிநபர் மாத வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த சக்கர நாற்காலி பயன்படுத்தும் ஒருவர், நாளை முதல் 170 வெள்ளி போக்குவரத்துக் கட்டணம் செலுத்தினால் போதும். தற்போது இவர்கள் 280 வெள்ளி கட்டணம் செலுத்துகின்றனர்.
தனிநபர் மாத வருமானம் $2,800 வரை ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த சக்கர நாற்காலி பயன்படுத்தும் ஒருவர், இனி 40 வெள்ளி குறைவாக 410 வெள்ளி மட்டுமே செலுத்துவர்.
இத்தகையோர் பொதுப் போக்குவரத்துச் சலுகைக் கட்டண அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம்.
இந்த அட்டையைப் பயன்படுத்தி 7.2 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிற்கு 25 விழுக்காட்டுச் சலுகைக் கட்டணத்தில் இவர்கள் பயணம் செய்யலாம்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த இயலாதோர் டாக்சி மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். டாக்சி அல்லது தனியார் வாடகை காரில் பள்ளி, வேலையிடம், வேலைவாய்ப்புப் பயிற்சி இடம் ஆகியவற்றுக்குச் சென்றுவர 80 விழுக்காட்டுக் கட்டணச் சலுகை இவர்களுக்கு வழங்கப்படும்.

