சாய் சீ வட்டாரத்தில் தீர்வை செலுத்தப்படாத 1,100 கள்ளச் சிகரெட் பெட்டிகள் சிக்கின. இதன் தொடர்பில் மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர். ஆடவர்களில் இருவர் சீன நாட்டினர். கைதுசெய்யப்பட்டவர்கள் 25 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் சாய் சீ வட்டாரத்தில் உள்ள வாரிங்கின் பார்க்கில் மேற்கொண்ட சோதனையில் கள்ளச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு வேனுக்கும் ஒரு வாகனத்துக்கும் இடையே பழுப்பு நிற பெட்டிகளை சந்தேக நபர்கள் மாற்றுவதை அதிகாரிகள் கண்டனர். சோதனையிட்டதில் கள்ள சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதோடு, அந்த இரண்டு வாகனங்களும், சீன நாட்டினரிடம் இருந்த $6,300 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிகரெட்டுகளுக்கு செலுத்தப்படாத ஒட்டு மொத்த வரியின் மதிப்பு $93,940 என்றும் செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் மதிப்பு $7,490 என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு சம்பந்தப்பட்ட பொருள்களுக்குச் செலுத்தவேண்டிய வரிக் கட்டணங்களில் 40 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படலாம். மேலும், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

