சீன அதிகாரிபோல பேசி ஏமாற்றும் மோசடி சம்பவங்களில் இவ்வாண்டில் இதுவரை சிங்கப்பூரைச் சேர்ந்த குறைந்தது 277 பேர் 30.3 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளனர்.
சிங்கப்பூர் காவல்துறை நேற்று இந்தத் தகவலை தெரிவித்தது.
சுகாதார அமைச்சு, உயர் நீதிமன்றம் அல்லது இதர அரசாங்க அமைப்புகளிடமிருந்து அைழப்பதாகக் கூறி குரல் பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் வரும்.
அந்த அழைப்பை பின்பற்றும் நபர்கள் சீன காவல்துறை அதிகாரி போல நடிக்கும் மோசடிக்காரர்களிடம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அப்போது பண மோசடி, பிற குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவதாக மோசடிக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
விசாரணைக்குத் தேவைப்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவரின் சொந்த விவரங்களையும் வங்கிக் கணக்குத் தகவல்களையும் மோசடிக்காரர்கள் பெற்றுவிடுகின்றனர்.
சில சம்பவங்களில் விசாரணைக்கு என்று கூறி வங்கிக் கணக்கை திறக்க வைத்து அதன் வழியாக மற்றவர்களுக்குப் பணத்தையும் மோசடிக்காரர்கள் மாற்றுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் முன்பின் அறியாத நபர்களிடம் ஆவணங்களை மோசடிக்காரர்கள் ஒப்படைக்கச் சொல்கின்றனர்.
"உங்கள் மீதான விசாரணையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்," என்றும் மோசடிக்காரர்கள் உத்தரவிடுகின்றனர்.
கடந்த மே 26ஆம் தேதியன்று சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் அதிகாரிபோல மோசடிக்காரர்கள் செயல்பட்டது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
மோசடிக்காரர்கள், 16 வயது மாணவரை அழைத்து மோசடிக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி தங்களுடைய வங்கிக் கணக்கில் 53,100 வெள்ளியை செலுத்த உத்தரவிட்டனர்.
அந்தப் பணத்தை திரட்ட முடியாத மாணவர், பயத்தில் தான் கடத்தப்பட்டதாக நாடகமாட மோசடிக்காரர்களிடம் ஒப்புக்கொண்டார்.
இத்தகைய மோசடிகளில் சிக்குபவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரிய வந்தாலோ அல்லது காவல்துறை விசாரணைக்காக பெற்ற பணத்தை மோசடிக்காரர்கள் திருப்பித் தர மறுத்தாலோ தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர் என்று காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் வெளிநாட்டு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு சிங்கப்பூரில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, யாரையும் கைது செய்யவோ அல்லது சிங்கப்பூரில் உள்ள பொதுமக்களை விசாரணைக்கு உதவுமாறு கேட்கவோ அதிகாரமில்லை என்று காவல்துறை நினைவூட்டியது.
கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரே சம்பவத்தில் ஆகப்பெரிய தொகையாக $6.2 மில்லியன் மோசடி செய்யப்பட்டது.
மோசடி பற்றிய கூடுதல் தகவல் scamalert.sg என்ற இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
1800-722-6688 நேரடித் தொைலபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் மேல் விவரங்களை அறியலாம் என்று காவல்துறை நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

