சிங்கப்பூர் தற்போது புதிய கொவிட்-19 கிருமித்தொற்று அலையை எதிர்கொண்டு வருகிறது; இருப்பினும் கிருமிப்பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் முதல்முறையாகக் கடுமையாக்கப்படவில்லை.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இந்தச் சுமையைத் தாங்கிக்கொள்ள தோள்கொடுப்பதாக இதற்குப் பொருள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
தாதியருக்கான சிறப்பு விருதளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர் தாதியரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியும் விதிமுறை மட்டுமே தற்போது நடப்பில் உள்ளதைச் சுட்டிய அமைச்சர், தடுப்பூசிகள் இன்னும் தொடர்ந்து செலுத்தப்படுவதாகவும் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதாகவும் கூறினார்.
தற்போதைய ஓமிக்ரான் ரக கொவிட்-19 கிருமித்தொற்று அலையில் மருத்துவமனைகள், தாதியர், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் பெரிதும் சுமையைத் தாங்குவதாகக் குறிப்பிட்டார்.
சிறப்பாகப் பணியாற்றிய 125 தாதியருக்கு அமைச்சர் ஓங் விருதுகளை வழங்கினார்.
மெச்சத் தகுந்த சேவையாற்றிய, தொழில்முறை மேம்பாட்டில் பங்குகொண்ட, தாதிமைத் தொழிலின் உயர்வுக்குப் பங்களித்த தாதியர்கள் இவ்வாறு சிறப்பிக்கப்பட்டனர்.
சீருடையின்மேல் அணிந்துகொள்ளக்கூடிய பதக்கத்துடன் ஆயிரம் வெள்ளித் தொகையும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்ற தாதியரில் ஒருவரான 37 வயது ஸ்ரீவித்யா ஜெயகோபாலன் (படம்), மூன்று சிறு பிள்ளைகளுக்குத் தாய்.
ஒன்பது மணி நேரம் அன்றாடம் பணியாற்றினாலும், கிருமிப்பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் சென்று கிருமிப்பரவல் பரிசோதனை நடத்தும் மருத்துவக் குழுவில் இவர் தொண்டூழியம் செய்தார்.
கூ டெக் புவாட் மருத்துவமனையில் நினைவாற்றல் குறைபாடு உள்ள முதியவர்களைப் பராமரிக்கும் பணியில் உள்ள ஸ்ரீவித்யா, கிருமிப்பரவலை முன்னிட்டு வருகையாளர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் காணொளி வாயிலாக நோயாளிகளும் குடும்பத்தினரும் பேசிக்கொள்ள வகைசெய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஓங், கிருமிப்பரவல் உச்சமடைந்திருக்கக்கூடும் என்று கூறியதுடன் இனி நிலைமை மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.