மார்சிலிங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் சென்ற மாதம் மூண்ட தீயில் மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் சிறார் பாதுகாப்புச் சேவைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
தீச்சம்பவத்தின்போது இவ்விரு குழந்தைகளும் அந்த வீட்டில் தனியே விடப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து சிறார் பாதுகாப்புச் சேவை விசாரணை மேற்கொள்வதாகவும் பிள்ளைகளின் குடும்பத்திற்குக் கூடுதல் உதவி தேவைப்படுகிறதா என்பதை மதிப்பிட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
புளோக் 218 மார்சிலிங் கிரெசண்ட்டில் உள்ள வீட்டில் சென்ற மாதம் 22ஆம் தேதி இரவு பத்தே முக்கால் மணியளவில் தீ மூண்டது குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 'ஃபேஸ்புக்கில்' பதிவிட்டிருந்தது.
படுக்கையறையில் மூண்ட தீயினால் வீடு முழுவதும் வெப்பம், கரும்புகை ஆகியவற்றால் சேதமுற்றதாகக் கூறப்பட்டது.
சம்பவத்தில் தனியே சிக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரையும் காவல்துறை அதிகாரிகள் இருவர் பாதுகாப்பாக மீட்டனர். சிறுவர்கள் இருவரும் அப்போது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
பிள்ளைகளின் பெற்றோர் தீச்சம்பவம் குறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டனர். ஆனால் இரண்டு நாள்களுக்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளிக்கையில் சிறுவர்கள் இருவரும் தேறி வருவதாக அவர்கள் கூறினர்.
சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டாலோ பெற்றோர் முறையாகப் பராமரிக்காததால் பிள்ளைகளின் நலன் பாதிக்கப்படுவதாக சந்தேகிக்கப்பட்டாலோ மட்டுமே சிறார் பாதுகாப்புச் சேவைக்குப் பரிந்துரைக்கப்படும் என்று குடும்பச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
நிலைமையை மதிப்பிட்டு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் பரிந்துரைப்பர். இதற்கு சில காலம் பிடிக்கும் என்று தெரிகிறது.