விரிவுபடுத்தப்பட்ட பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுகள் திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் சிறப்பு வழங்குதொகைகள் அளிக்கப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதிபெறுவர். இதன்கீழ் ஒவ்வொருவருக்கும் 700 வெள்ளி வரையிலான தொகை வழங்கப்படும்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சென்ற மாதம் பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுகள் திட்டம் விரிவுகாணும் என அறிவித்தார்.
தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் இரண்டு தொகைகளைப் பெற்றுக்கொள்வர். முதலாவது ஜிஎஸ்டிவி ரொக்கம், அடுத்தது ஜிஎஸ்டிவி சிறப்பு ரொக்க வழங்குதொகை.
இந்தத் திட்டத்தின்கீழ், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களின் மத்திய சேமநிதி மெடிசேவ் கணக்கில் 450 வெள்ளி வரை நிரப்பப்படும். ஏறத்தாழ 575,000 பேர் இதனால் பலனடைவர்.
டிசம்பர் 31, 1969க்கு முன்னர் பிறந்த, இதுவரை முன்னோடித் தலைமுறை அல்லது மெர்டேக்கா தலைமுறையினருக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளாத சிங்கப்பூரர்களின் மெடிசேவ் கணக்கில் 100 வெள்ளி செலுத்தப்படும். அடுத்த மாத இறுதிக்குள் இந்தத் தொகை நிரப்பப்படும்.
குறைந்த வருமானப் பின்னணியில் இருந்து வருவோருக்கும் முதியவர்களுக்கும் பொருள், சேவை வரிச் செலவு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றைச் சமாளிக்க உதவும் அரசாங்க நடவடிக்கையின் ஓர் அங்கம் இது என்று நிதியமைச்சு கூறியது.
ஏற்கெனவே இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து 'சிடிசி' பற்றுச்சீட்டுகள், 'ஜிஎஸ்டி யூ சேவ்' பற்றுச்சீட்டுகள், சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி, மாணவர்களின் 'எடுசேவ்' கணக்கு அல்லது உயர்கல்விக்கான கணக்கில் தொகை நிரப்பப்பட்டதையும் அமைச்சு சுட்டியது.
வரவிருக்கும் மாதங்களில் மேலும் சில வழங்குதொகைகள், பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி, குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் நிரப்புதொகை போன்றவை வழங்கப்படும் என்பதையும் நிதியமைச்சு குறிப்பிட்டது.
பணவீக்கம் மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கத்தை அரசாங்கம் புரிந்துகொண்டிருப்பதை இது காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பல்வேறு தரப்பினர் பகிர்ந்துகொண்டனர்.
உணவுப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு எனச் செலவுகள் அதிகரித்திருப்பதால் இத்தகைய உதவியை அவர்கள் வரவேற்றனர்.
விரிவுகாணும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட்டில் சிறப்பு வழங்குதொகை

