இந்தோனீசியா இன்று முதல் சிங்கப்பூருக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யவிருப்பதாக அந்நாட்டு வேளாண் அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சி அனுப்பப்படும் என்று அது கூறியது.
சிங்கப்பூருக்கு கோழி இறைச்சி, கோழி இறைச்சிப் பொருள்கள் ஆகியவற்றை அனுப்புவதற்கு இந்தோனீசியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
மேலும் 12 இந்தோனீசிய நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சிங்கப்பூர் சென்ற ஆண்டு 214,400 டன் கோழி இறைச்சியை இறக்குமதி செய்தது. அதில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து தருவிக்கப்பட்டது.
மலேசியா சென்ற மாதம் கோழி இறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததையடுத்து இந்தோனீசியா, தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படும் என்று சிங்கப்பூர் அறிவித்தது.

