பருவநிலை மாற்றம், நீண்டகால அடிப்படையில் சிங்கப்பூரில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கண்டறியும் புதிய ஆய்வுத் திட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இதற்காக 23.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கடல் மட்டம், உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்து அவற்றைச் சமாளிப்பதற்கான கொள்கைகளை வழிநடத்த இது உதவும்.
பருவநிலை மாற்ற அறிவியல் ஆய்வுத் திட்டத்தை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு நிலையம் மேற்கொள்ளும். இந்த ஆய்வு ஐந்து முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும்.
கடல் மட்ட உயர்வு, நீர்வளமும் வெள்ள நிர்வாகமும், பல்லுயிர்க் கட்டமைப்பும் உணவுப் பாதுகாப்பும், சுகாதாரமும் எரிசக்தியும், அறிவியலுக்கும் கொள்கைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக ஆய்வு மேற்கொள்ளுதல் ஆகியவை இந்த முன்னுரிமைகள்.
ஆய்வின் தொடக்க நிகழ்ச்சியில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (படம்) உரையாற்றினார்.
2100ஆம் ஆண்டுக்குள் உலகின் 30 விழுக்காட்டு விளைநிலங்களும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பும் பருவநிலை ரீதியாக சீர்கெடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் அண்மையில் கூறியிருப்பதை அமைச்சர் சுட்டினார்.
மீன்பிடிப்பு, வேளாண்மை போன்ற பொருளியல் நடவடிக்கைகள் இந்த வட்டாரக் கடலோரப் பகுதிகளில் இடம்பெறுவதைச் சுட்டிய அவர், ஆய்வுத்தரவுகள் பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் வட்டார நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

