அரச புருணை ஆயுதப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் பலாவான் ஹாஜி ஹம்சா ஹாஜி சகாட்டுக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவில் நேற்று மேன்மைதங்கிய ராணுவச் சேவை விருதை அவருக்கு வழங்கினார்.
மேஜர் ஜெனரல் ஹம்சாவின் தலைமையின்கீழ் இருதரப்பு ராணுவப் பயிற்சிகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன.
'எக்சர்சைஸ் மஜு பெர்சாமா', 'எக்சர்சைஸ் பெலிக்கன்', 'எக்சர்சைஸ் ஏர்காட்' போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்க பயிற்சிகள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு உறவுகளை இவர் வலுப்படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான ராணுவ நிபுணத்துவப் பரிமாற்றம், பயிற்சிகளில் கலந்துகொள்ள இருதரப்பு ராணுவ வீரர்களும் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் இடம்பெற மேஜர் ஜெனரல் ஹம்சா வழிவகுத்தார்.
இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பிற்கு இத்தகைய பயிற்சி நடவடிக்கைகள் உதவியதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது.
சென்ற ஆண்டு மெய்நிகர் முறையில் இடம்பெற்ற 18ஆவது ஆசியான் தற்காப்புத் தலைவர்கள் மாநாட்டை புருணை ஆயுதப்படை ஏற்று நடத்தியது. இந்நடவடிக்கை சிறப்புற மேஜர் ஜெனரல் ஹம்சாவின் சிறப்பான தலைமைத்துவமும் ஒரு காரணம்.
இம்மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூர் வந்த இவர், நாளை வரை இங்கு இருப்பார். மேஜர் ஜெனரல் ஹம்சாவின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, அணுக்கமான உறவுகளை எடுத்துக்காட்டுவதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான தற்காப்பு உறவுகள் தொடங்கி சென்ற ஆண்டுடன் 45 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.
சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருதை இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, மலேசியா ஆகியவற்றின் ராணுவத் தலைவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

