ஆணையத்திடமிருந்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் 'வோலோகாப்டர்'
மரினா பே வட்டாரத்தைப் புதிய விதமாக ரசிக்க விரும்பும் சுற்றுப்பயணிகளுக்கு நற்செய்தி. சிங்கப்பூரில் வணிக ரீதியான முதல் ஆகாய டாக்சிகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள பயணப் பாதைக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தால் பயணிகள் அவற்றில் பயணம் செய்யலாம்.
ஆகாய டாக்சி துறையில் முன்னோடியாகத் திகழும் 'வோலோகாப்டர்' நிறுவனம் இயக்கும் இந்த 12 கிலோமீட்டர் பயணப் பாதை, 2024 நடுப்பகுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானிகள், பொறியாளர்கள், சேவைப் பணியாளர்கள் போன்றவர்களைப் பணியமர்த்தும் வேலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வோலோகாப்டர் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் பாயர் தெரிவித்தார்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் நேற்று தொடங்கப்பட்ட பொதுக் கண்காட்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஆற்றல் உடைய இந்த ஆகாய டாக்சி மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்திலும் 35 கிலோமீட்டர் தூரமும் செல்லும்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ஜெர்மானிய நிறுவனமான வோலோகாப்டரின் முதல் பயணம், மரினா சவுத்தில் தொடங்கி மரினா நீர்த்தேக்கத்தில் முடிவடையும். மரினா அணைக்கட்டு, பெஞ்சமின் ஷியர்ஸ் பாலம் ஆகிய பகுதிகளில் தரையிலிருந்து 100 முதல் 150 மீட்டர் உயரத்தில் இந்த டாக்சி பறக்கும். தஞ்சோங் ரூ பகுதியைச் சுற்றிவிட்டு மரினா சவுத் பகுதிக்கு இது திரும்பும்.
இந்தப் பயணம் ஏறக்குறைய 15 நிமிடங்கள் நீடிக்கும். இந்தப் பயணப் பாதை குறித்த ஆய்வுகள் நடந்து முடிந்துவிட்டதாகத் தெரிவித்த திரு பாயர், முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பாதைக்கு ஒப்புதல் அளிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொன்னார்.
ஆகாய டாக்சி, சுற்றுப்பயணிகள் ஏறிச் செல்வதற்கான பயணப் பாதை என்று குறிப்பிடப்படுவதற்கான காரணத்தை திரு பாயர் விளக்கினார்.
"சிங்கப்பூர் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால், சிங்கப்பூருக்கு ஆண்டுதோறும் வரும் ஏறக்குறைய 20 மில்லியன் சுற்றுப்பயணிகள், உற்சாகமான அனுபவத்தைப் பெற விரும்புகின்றனர். எனவே, ஆகாய டாக்சிகளில் ஏறி சுற்றிப் பார்ப்பது அத்தகைய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்," என்றார் அவர்.
ஆகாய டாக்சி புறப்படுவதற்கான, தரையிறங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்வது குறித்து வோலோகாப்டர் நிறுவனம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரு பாயர் கூறினார்.
வோலோகாப்டரின் ஆகாய டாக்சிகள், சிறிய ஹெலிகாப்டர்களைப் போன்று தோற்றமளிக்கும். இவை பாதுகாப்பானவை, அதிக இரைச்சல் எழுப்பாதவை, சௌகரியமானவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை எனக் கூறப்படுகிறது.
வோலோகாப்டர் அதன் ஆகாய டாக்சி சேவையைத் தொடங்க சிங்கப்பூரையும் பிரான்ஸ் தலைநகர் பாரிசையும் முதலிரு நகர்களாக தேர்வு செய்துள்ளது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், ஐரோப்பிய அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஒப்புதல்களைப் பெறும் பணியில் வோலோகாப்டர் ஈடுபட்டு உள்ளது.

