42 எம்ஆர்டி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்புப் பணி
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளைப் பயன்படுத்தும் பயணிகள், எம்ஆர்டி நிலைய மின்படிக்கட்டுகளின் இயக்கத்தில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணரலாம்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் உச்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மின்படிக்கட்டுகள் இனி மெதுவான வேகத்தில் இயங்கும். அதாவது, இதுவரை வினாடிக்கு 0.75 மீட்டராக இருந்த வேகம், இனி வினாடிக்கு 0.5 மீட்டராகக் குறையும். முதியவர்களும் சிறாரும் மின்படிக்கட்டுகளில் பாதுகாப்பாக ஏறிச்செல்ல இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மின்படிக்கட்டுகள் எந்தத் திசையில் இயங்குகின்றன என்பதை அம்புக்குறிகள் காட்டும். மின்படிக்கட்டுகளுக்கும் பக்கவாட்டில் உள்ள சட்டத்துக்கும் இடையே தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியில் பயணிகளின் கால்கள், ஆடைகள் சிக்கிக்கொள்வதை இந்தத் தடுப்புகள் தடுக்கும்.
$47.3 மில்லியன் மதிப்பிலான ஆறாண்டு மின்படிக்கட்டுச் சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் ஆகப் பழமையான 42 ரயில் நிலையங்களில் உள்ள 231 மின்படிக்கட்டுகள் கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டங்கட்டமாக புதுப்பிக்கப்பட்டு வந்தன.
'ஓட்டிஸ்' எனும் ஒப்பந்த நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கையாண்டது. சிங்கப்பூரில் எம்ஆர்டி கட்டமைப்பு 1987ல் தொடங்கப்பட்டதில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய அளவிலான முதல் மின்படிக்கட்டுச் சீரமைப்புத் திட்டம் இது.
ஒவ்வொரு மின்படிக்கட்டையும் சீரமைக்க எட்டு முதல் 10 வாராங்கள் எடுக்கும் என 2016ல் எஸ்எம்ஆர்டி நிறுவனம் கணித்திருந்தது. ஆனால், பணி தொடங்கியவுடன்தான், சீரமைப்புப் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு மின்படிக்கட்டுக்கும் குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் எனத் தெரியவந்தது.
சிக்கலான மின்படிக்கட்டுகளை முழுமையாகச் சீரமைக்க எட்டு மாதங்கள் வரை எடுத்தது. இதனால், 2021 இறுதியில் முடிவடைய இருந்த மின்படிக்கட்டுச் சீரமைப்புத் திட்டத்தை நிறைவுசெய்வதில் கொவிட்-19 காரணமாக மேலும் தாமதம் ஏற்பட்டது.