ஆசியா, பசிபிக் வட்டாரங்களின் வளரும் நாடுகளில் தனியார் துறை சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் கூடுதல் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூருடன் ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) அதன் ஒப்பந்தம் ஒன்றைப் புதுப்பித்து உள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி ஆளுமை மற்றும் பொதுக் கொள்கை, தனியார் துறை வளர்ச்சி, பருவநிலை மாற்றம் ஆகிய அம்சங்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலையும் ஒத்துழைப்பும் மேம்படும்.
இதற்காக சிங்கப்பூரின் பொது மற்றும் தனியார் துறைகளின் மூலம் முதலீடு, நிதியுதவி, நிர்வாகத் திறன்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வளரும் ஏடிபி உறுப்பு நாடுகளின் தனியார் துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிங்கப்பூரின் நிதி அமைச்சு தெரிவித்தது.
இந்த வளரும் உறுப்பு நாடுகளில் இலங்கை, சீனா, மியன்மார் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் புத்தாக்கச் செயல்முறைகளையும் ஊக்குவிப்பதற்கு ஏடிபியுடன் சிங்கப்பூர் இணைந்து ஒத்துழைக்கும்.
சிங்கப்பூரின் ஏடிபி அலுவலகம் 2020ல் திறக்கப்பட்டது. புதிய ஒப்பந்தப்படி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் அலுவலகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றது அமைச்சு. சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், ஏடிபி தலைவர் மசட்சுகு அசகாவா ஆகிய இருவரும் நேற்று மாலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஏடிபியின் செயல்பாட்டைப் பாராட்டியும் இருந்தார் திரு வோங்.

