புருணையில் பிரதமர் லீ, மனைவி
ஹோ சிங்குங்கு அரச மரியாதை
பிரதமர் லீ சியன் லூங், அவரின் துணைவியார் திருவாட்டி ஹோ சிங் ஆகிய இருவரும் புருணை மன்னரிடமிருந்து நாளை அரச மரியாதை பெறவுள்ளனர். புருணைக்கு பணி நிமித்த பயணம் மேற்கொண்டிருக்கும் திரு லீ, அவரின் மனைவியுடன் விருது விழாவில் கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. பிரதமர் லீக்கு மிகவும் மதிப்பிற்குரிய குடும்ப விருதும் திருவாட்டி ஹோவுக்கு படுக்கா ஸ்ரீ லைலா ஜாசா முதல் வகுப்பு எனும் மிகவும் மதிப்புக்குரிய விருதும் வழங்கப்படும். இத்துடன் புருணை மன்னர் ஹசனல் போல்கியாவின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது. டெம்புரோங் மாவட்டத்திலுள்ள சிங்கப்பூரின் ஆயுதப்படை பயிற்சி வளாகத்தையும் திரு லீ பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர், சீனா இடையிலான
நீண்டகால நல்லுறவு மறுஉறுதி
சீன கம்யூனிச கட்சியின் அனைத்துலகத் துறை அமைச்சர் லியூ ஜியன்சாவ் நேற்றுக் காலை பிரதமர் அலுவலக அமைச்சரான டாக்டர் மாலிக்கி ஒஸ்மானைச் சந்தித்தார். கடந்த மாதம் புதிதாகப் பதவியேற்றிருந்த திரு லியூவுக்கு டாக்டர் மாலிக்கி தம் வாழ்த்துகளைத் தெரிவித்தார். சந்திப்பில் வெளியுறவு மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன்னும் கலந்துகொண்டார். சிங்கப்பூர், சீனாவுக்கு இடையே நீடித்துவரும் நல்லுறவை அமைச்சர்கள் இருவரும் மறுஉறுதிப்படுத்திக்கொண்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மேலும் ஒரு குரங்கம்மைச் சம்பவம்
உள்ளூர் அளவில் மூன்றாவது குரங்கம்மைச் சம்பவம் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்தவர் உட்பட ஆறு குரங்கம்மைச் சம்பவங்கள் இங்கு பதிவாகிவிட்டன. இறுதியாகக் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்ட நோயாளி, ஒரு சிங்கப்பூரர் என்றும் அவர் 41 வயது ஆடவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஒருவருக்கும் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டது. இருவருக்கும் தோலில் தடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவ உதவி நாடியபோது தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போது இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட வார இறுதிக்குப்பின் புதிதாக 16,870 பேருக்கு கொவிட்-19
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் பதிவான கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் மும்மடங்காகப் பதிவாகியிருந்தது. செவ்வாய்க்கிழமையன்று 5,979 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை
16,870 ஆனது. அத்துடன் கொவிட்-19 தொடர்பில் மூன்று மரணங்களும் பதிவாகின. இதற்குமுன் மார்ச் 9ஆம் தேதியன்று இதுபோன்ற அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அந்த காலகட்டத்தில் அப்போதைய ஓமிக்ரான் கிருமி அலை அதன் உச்சத்தை எட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட வார இறுதிக்குப் பிறகு புதிதாகப் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் இதுபோன்ற அதிகரிப்பைக் காணலாம் என்றது அமைச்சு.

