சிங்கப்பூருக்கு வரும் கப்பல் களுக்கு விற்கப்பட இருந்த மதுவுக்கு வரி செலுத்தாது, உள்நாட்டில் விற்கத் திட்டம் தீட்டியவர்களில் ஒருவருக்கு 28 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஆக நீண்டகாலத்துக்கும் ஆகப் பெரிய அளவிலும் கும்பலாக வரி ஏய்ப்பு செய்து மது விற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குற்றச்செயல் அது.
அந்த வரி செலுத்தாத மது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விற்கப்பட்டது.
அதன்மூலம் மொத்தம் 25 மில்லியன் வரி ஏய்ப்பு நடந்தது. சுங்கவரி, பொருள் சேவை வரி ஏய்ப்பு ஆகியவை இதில் அடங்கும்.
வெளிநாட்டுக் கப்பல்களில் வேலை செய்வோருக்கு மரினா சவுத் துறைமுகம், பெஞ்சூரு படகுத்துறையிலிருந்து விற்க அனு மதிக்கப்பட்ட மது சட்டவிரோதமாக உள்ளூரில் விற்கப்பட்டது.
திட்டம் தீட்டிய இருவரில் ஒருவர் லிம் வெய் லுவென், 41. சுங்கத்துறை சட்டத்தின்கீழ், $3,114,858.16 மதிப்புள்ள சுங்கவரி, பொருள் சேவை வரி ஏய்ப்பு செய்த தன் தொடர்பில் இரண்டு குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிப்பின்போது மேலும் 16 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
லிம்முக்கு விதிக்கப்பட்ட அபராதம் $28,033,723.44 ஆகும். இது அவர் வரி ஏய்ப்பு செய்த தொகையைவிட ஒன்பது மடங்கு அதிகமான தொகையாகும்
அபராதத்தைச் செலுத்த முடியா விட்டால், லிம் ஆறு ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
திட்டம் தீட்டிய மற்றொருவரான, முகம்மது ரிதுவான் டியோ என்று அறியப்படும் டியோ டியென் சூன்னுக்கு முன்னதாக ஓராண்டு சிறைத்தண்டனையும் கிட்டத்தட்ட $48 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் தொடர்புள்ள மேலும் சிலருக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

