அருணா கந்தசாமி
வேலை அனுமதியில் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியரான நரேன்ராஜ் ரமேஷ், 25, தாமதமாக வேலை முடியும்போது இனி சிங்கப்பூரில் அவசரத்துக்குக்கூட இரவு தங்க முடியாது.
நீண்டநேரம் வேலை செய்யும் தம்மைப் போன்றவர்கள் அசதியோடு வீடு திரும்ப வேண்டி இருப்பதாக தமிழ் முரசிடம் கூறினார் மளிகைக் கடையில் பணியாற்றும் நரேன்ராஜ்.
இதற்குக் காரணம் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சிங்கப்பூரில் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது என்ற விதிமுறை.
அத்துடன், வெளிநாட்டு வாகனங்கள் தினமும் குறைந்தது 6 மணி நேரம் சிங்கப்பூரை விட்டு வெளியாகவேண்டும். ஜூலை 1ஆம் தேதி அந்த விதிமுறைகள் நடப்புக்கு வந்தன.
கடந்த சில வாரங்களாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலிருக்கும் நில சுங்கச்சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சிங்கப்பூருக்குள் வரும் வாகனங்களைக் குறைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது.
"சிங்கப்பூரில் மோட்டார் வாகனங்களை ஓட்டும் மலேசியர் களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆக அரசாங்கம் விபத்துகளைக் குறைக்கவும் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடிவு செய்திருக்கக் கூடும்," என்றார் விற்பனை உதவியாளராகப் பணிபுரியும் மலேசியர் கு.வினோத் குமார், 27. அரசாங்கம் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று உறுதியாக நம்புவதாய் அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டத்தால் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் நண்பர்களிடமிருந்தும் சமூக ஊடகங்களிலிருந்தும் இந்த பிரச்சனையின் தாக்கத்தைப் புரிந்துகொண்டாகக் கூறினார் உணவுத் துறையில் பணிபுரியும் சு.குமரேசன், 29.
அவர் தமது குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் தினமும் மலேசியாவுக்கு செல்லும் கட்டாயம் இல்லை என்று கூறினார்.
"குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தால் பயண அலைச்சலைக் குறைப்பதோடு எரிவாயு செலவுகளையும் குறைக்கலாம். மலேசியாவிற்குச் சென்று வருவதற்குக் குறைந்தது $10 செலவாகும்," என்றார் அவர்.
தினமும் மலேசியாவிற்குப் பயணம் செய்யும் கார்த்திகேசன் செல்வராஜ், 31, இந்த புதிய விதிமுறை தம்மைப் பாதிக்கவில்லை என்றார்.
முடி திருத்துபவராகப் பணிபுரியும் அவர், "என்னுடைய வேலை அவகாசம் தினமும் பத்து மணி நேரம். ஆக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப நிறைய நேரம் இருக்கும். ஆனால் என்னுடைய நண்பர்கள் இந்த செய்தி முதன்முதலில் வெளிவந்தவுடன் அவர்களது வேலைகளை 18 மணி நேரத்திற்குள் திட்டமிட்டுக்கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு அலைச்சலாகவும் களைப்பாகவும் இருப்பதாக என்னிடம் பகிர்ந்துகொண்டனர்." என்றார்.
சிங்கப்பூரில் மூன்று ஆண்டு களாக உணவுத் துறையிலிருக்கும் ந. தாமோதரன், 23, கொவிட்-19 தொற்று காலகட்டத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்று வருவது சிரமமாக உள்ளது என்று பகிர்ந்துகொண்டார்.
அவர் பணத்தை மிச்சப்படுத்த மலேசியாவிற்குப் பயணம் செய்வதையே குறைத்துக்கொண்டதாகவும் தேவை ஏற்பட்டால் பேருந்தில் மட்டுமே பயணம் செய்வார்கள் என்று தாமோதரன்கூறினார்.
"மலேசியாவிலும் விலைவாசிஅதிகரித்துக்கொண்டிருக்கிறது. அடிக்கடி பயணம் செய்தால் கட்டுப்படி ஆகாது" என்றார் அவர்.
புதிய விதிமுறையால் சிங்கப்பூரில் விற்கப்படும் மோட்டார் வாகங்களின் எண்ணிக்கை 30% அதிகரித்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எல்லாருக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைக்காது.
"சிங்கப்பூரில் வாகனம் வாங்க முயன்றாலும், விலை அதிகமாக உள்ளது. எங்களது அன்றாட சம்பளத்தில் இங்கு வாகனம் வாங்க முடியாது," என்று கூறினார் நரேன்ராஜ்.
வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வெளிநாட்டு வாகனங்களை சிங்கப்பூரில் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது என்ற விதிமுறையை முதன்முறையாக மீறுவோருக்கு $1,000 வரை அபராதமும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
அடுத்தடுத்த குற்றங்களுக்கு $2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

