நாய் ஒன்று துன்புறுத்தப்படுவதைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாக வலம்வந்ததை அடுத்து நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் 'K9 Connection' நிலையம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாய்களைப் பராமரிக்கும் இடமாகவும் இயங்கிவந்த அந்த நிலையம், சான்றளிக்கப்பட்ட நாய்கள் பயிற்றுநர்ப் பட்டியலிலிருந்து மார்ச் 25 முதல் நீக்கப்பட்டுவிட்டதாக விலங்குநல மருத்துவச் சேவை தெரிவித்தது.
துன்புறுத்தலைக் காட்டும் அந்த இரண்டு நிமிடக் காணொளியில் ஒரு நாயை ஆடவர் ஒருவர் உலோக உணவுக் கிண்ணம் கொண்டு அடிப்பதாக உள்ளது.
நாய் அதன் இருப்பிடத்தின் ஓர் ஓரத்திற்குப் பின்வாங்குவதையும் பயத்தில் அதன் வால் அதனுடைய பின்னங்கால்களுக்கு இடையே செல்வதையும் காணொளியில் பார்க்க முடிகிறது.
"நரகத்திற்கு உன்னை வரவேற்கிறேன் நண்பா. நான்கு வார நரக வேதனையை அனுபவிக்கப் போகிறாய். இன்றிரவு உன்னிடமிருந்து சத்தம் ஏதும் வந்தால், உன்னை என்ன செய்கிறேன் பார்," என்று அந்த ஆடவர் கூறுவதாகக் காணொளியில் உள்ளது.
இந்நிலையில், நன்கு ஆராய்ந்து தங்களின் செல்லப்பிராணிக்குப் பொருத்தமான காப்பாளரை உரிமையாளர்கள் தேர்வு செய்யுமாறு விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநரான ஆர்த்தி சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

