ஜி20 நாடுகள், உணவுப் பொருட்கள் போதிய அளவுக்கு இருப்பதை உறுதிப்படுத்துவது போன்ற இப்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு, கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பாலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஜி20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது கூட்டத்தில் பேசிய அவர், உலகப் பொருளியல் பற்றியும் அனைத்துலக நிதி ஏற்பாடுகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்தார். எல்லா நடுகளுமே இப்போது சிக்கலான சூழ்நிலையை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகப் பொருளியல் வாய்ப்புகள் நிச்சயமில்லாமல் இருக்கின்றன. இந்தச் சூழலில் அனைத்துலக பண நிதியம், உலக வங்கி போன்ற பலதரப்பு அமைப்புகளின் பணி இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமானதாக ஆகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

