சிங்கப்பூரில் அனைத்து சமய நல்லிணக்கத்திற்கு குறிப்பிடத்தக்க தொண்டாற்றும் தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அங்கீகரித்து பாராட்டுவதற்காக ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு புதிய விருது ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.
'சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க முன்மாதிரி விருது' என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய விருது, மேலும் பல சிங்கப்பூரர்கள் முன்வந்து அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் தொடர்ந்து பாடுபட ஊக்கமூட்டும்.
ஜாமியா சிங்கப்பூரின் 90வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் நேற்று அந்த விருது தொடங்கப்பட்டது.
அதைத் தொடங்கிவைத்து பேசிய மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், இப்போதைய காலகட்டத்திற்கு இத்தகைய விருது போன்ற முயற்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார்.
உலகளவில் தேசியவாத போக்குகள், இனவாத அரசியல், சமய சகிப்பின்மை போன்ற போக்குகள் தலைதூக்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
வெவ்வேறான சமயங்களுக்கு மதிப்பு அளிக்கின்ற, பன்மயத்தைத் தழுவிக்கொள்கின்ற நம்முடைய பல சமய, பல இன சமூகத்தைப் போற்றி கொண்டாடுகின்ற ஒரு சமூகத்தைத் தொடர்ந்து பேணி வளர்த்துவர வேண்டும் என்று திரு டியோ வலியுறுத்தினார்.
ஒரே மக்களாக நம்மை ஐக்கியப்படுத்தும் பொதுவான நன்னெறிகளை இதன்மூலம் நாம் பலப்படுத்த முடியும் என்றார் அவர்.
இது நிச்சயமில்லாத இப்போதைய உலகை எதிர்கொள்ள நமக்குப் பலத்தைக் கொடுக்கிறது என்றும் திரு டியோ குறிப்பிட்டார்.
ஜாமியா சிங்கப்பூர் போன்ற சமூக அமைப்புகள் ஆற்றும் முக்கிய பணிகளை அவர் பாராட்டினார்.
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, நேற்றைய நிகழ்ச்சியில் 'ஜாமியா சிங்கப்பூரின் 90ஆம் ஆண்டு விழா', 'சமய நல்லிணக்கம்: ஜாமியாவின் பங்களிப்புகள்' என்ற இரண்டு நூல்களின் சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டார்.
சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு எடுக்கும் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதில் சமூக அமைப்புகள் முக்கிய பணியாற்றுவதாக திரு டியோ குறிப்பிட்டார். நெருக்கடி காலத்தின்போதும் சமூக அமைப்புகளும் சமூக சேவை அமைப்புகளும் முக்கிய பணியாற்றுகின்றன. இதன்மூலம் மீள்திறன் பலப்படுகிறது. சமூகத் திற்கு ஆதரவு கிடைக்கிறது.
சிங்கப்பூரர்களுக்குப் பொதுவான வாய்ப்பு வசதிகளை விரிவுபடுத்தி வெவ்வேறான குழுவினரை ஒருங்கே கொணர்வதிலும் சமூக அமைப்புகள் முக்கிய பங்காற்றுவதாக திரு டியோ கூறினார்.
சிங்கப்பூரில் பல இன, பல சமய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதில் ஜாமியா சிங்கப்பூர் மிகப் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பைத் தோற்றுவித்த மௌலானா அப்துல் அலிம் சித்திக், 1949ல் அனைத்து சமய அமைப்பை தோற்றுவித்தார் என்பதையும் திரு டியோ சுட்டிக்காட்டினார். ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் 90ஆம் ஆண்டு கொண்டாட்ட விருந்து நேற்று மரினா பே சாண்ட்சில் நடந்தது.
அதில் தொடக்க உரையாற்றிய ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் முகம்மது ஹஸ்பி அபுபக்கர், கடந்த 90 ஆண்டுகளாக ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் வளர்ச்சி பற்றியும் அதன் இப்போதைய நடவடிக்கைகள், சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங் காணொளி வாயிலாக நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
சமூகத்திற்கு, குறிப்பாக உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஜாமியாவின் பணிகள் உறுதுணையாக உள்ளதாக தெரிவித்த பிரதமர், ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு ஆற்றிவரும் முக்கியமான தொண்டுகளுக்கு அரசுதொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
கூடுதல் செய்தி:
ஹர்ஷிதா பாலாஜி

