பிரதமர் லீ சியன் லூங் புருணைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண் டார். அவர், தம்புரோங் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களைச் சந்தித்தார்.
பிரதமருடன் ராணுவத் தலைவர் டேவிட் நியோவும் உடன் இருந்ததாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
புருணையில் இடம்பெறும் சிங்கப்பூர் ஆயுதப் படையினரின் பயிற்சி, ஆகஸ்ட்டில் இருந்து கட்டம் கட்டமாக அதிகமாகி கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையை எட்டும் என்றது அமைச்சு.
புருணையில் சிஆ படைகள் நடத்தும் காட்டுப் புற பயிற்சி ஒருபுறம் இருக்க, அந்தப் படைகளும் புருணை அரசு ஆயுதப் படைகளும் இரு தரப்பு பயிற்சிகளை அடிக்கடி நடத்துகின்றன.
நிபுணத்துவ பரஸ்பர பரிமாற்றங்களும், பரஸ்பர பயிற்சி வகுப்புகளும் இடம்பெறுகின்றன என்றும் அமைச்சு தெரிவித்தது.
இந்தப் பரஸ்பர நடவடிக்கைகள் இரு நாட்டு ஆயுதப் படைகளின் நிபுணத்துவத்தை மேம்படுத்தி உள்ளன. அவற்றுக்கு இடையில் உறவுகளைப் பலப்படுத்தி உள்ளன.
தம்புரோங்கில் தான் முழுநேர தேசிய சேவையாளர்களையும் முழுநேர வீரர்களையும் சந்தித்ததாக பிரதமர் லீ ஃபேஸ்புக்கில் கூறினார்.
திரு லீ, ஜூலை 14 முதல் 16 வரை புருணைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு நேற்று புருணை சுல்தான் அரசமரியாதை அளித்து சிறப்பித்தார்.

