சிங்கப்பூரில் இருவருக்கு ஓமிக்ரான் கிருமியின் புதிய திரிபு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிஏ.2.75 எனும் புதிய திரிபு தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இருவரும் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது. அவ்விருவரும் தற்போது குணமடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
புதிய திரிபு முதன்முறையாக இந்தியாவில் மே மாதம் கண்டறியப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் இந்த வகை கிருமி பரவியுள்ளது.
புதிய திரிபு மிக எளிதில் பரவக்கூடியது என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இக்கிருமி தொற்றும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மற்ற ஓமிக்ரான் திரிபுகளுடன் ஒப்பிடும்போது, இந்த திரிபு வேகமாக பரவக்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சு சொன்னது.

